ஹபீபி: திரைவிமர்சனம்

ஹபீபி: திரைவிமர்சனம்


மீரா கதிரவன் இயக்கத்தில் தமிழில் வெளியாகியுள்ள ஹபீபி திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க. 

கதைக்களம்

1980யில் திருநெல்வெலியின் கடையநல்லூரில் யூசுப் (கஸ்தூரி ராஜா) என்ற நபர் கைத்தறி நெசவு தொழில் செய்து வருகிறார். அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு அபு தாஹிர் (ஈஷா) என்று பெயர் வைக்கிறார்கள்.

இதற்கிடையில், நெசவு செய்து வரும் யூசுப்பின் தம்பிக்கு திருமணம் நடக்கிறது. அதன் பின்னர் அவர் குடும்ப சூழல் காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கிறார்.

அந்த ஊரில் இதே போல் பலரும் தங்கள் தொழிலை கைவிட்டு வெளிநாடு செல்ல, யூசுப் மட்டும் தொழிலில் நட்டம் வந்தாலும் கைத்தறி தொழில்தான் செய்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

இந்த சூழலில் சிறுவயது முதலே அபு தாஹிருக்கு நிலாஃபர் (மாளவிகா மனோஜ்) மீது இருக்கும் ஈர்ப்பு, அவர் பருவ வயதை எட்டியதும் காதலாக மாறுகிறது.

எனினும், வசதி வாய்ப்பில் நிலாஃபரின் குடும்பம் தங்களை விட உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதால் அபுதாஹிர் காதலை சொல்ல தயங்குகிறார்.

மறுபுறம் அவரது மாமா அபுவை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க முயற்சிக்க, அதை எப்படியோ தவிர்த்து வருகிறார்.

பின்னர் அபுதாஹிரும், நிலாஃபரும் சேர்ந்தார்களா? யூசுப் கைத்தறியை விட்டாரா என்பதே மீதிக்கதை. 

படம் பற்றிய அலசல்

அவள் பெயர் தமிழரசி, விழித்திரு ஆகிய படங்களை கொடுத்த இயக்குநர் மீரா கதிரவன் தான் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இஸ்லாமிய சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்களை துல்லியமாகவும், நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்.

அதேபோல் கடையநல்லூர் என்ற ஊர் 1980யில் இருந்து 2023 வரை எப்படி மாறியிருக்கிறது என்பதை அவர் காட்டிய விதம், நாமும் அந்த ஊரில் அம்மக்களுடன் வாழ்ந்தது போன்ற உணர்வைத் தருகிறது.

அபுதாஹிர் முதன்மை கதாபாத்திரம் என்றாலும், கஸ்தூரி ராஜா உள்ளிட்ட பிற கதாபாத்திரங்களின் வாழ்வைத்தான் முதல் பாதியில் சுவாரஸ்யமாக காட்டப்பட்டுள்ளது.

90களில் கிராமத்து காதலை காட்சிப்படுத்திய விதம் அவ்வளவு சுவாரஸ்யமாக உள்ளது. இஸ்லாமியர்களின் திருமண முறை, சடங்குகள், நெல்லை வட்டார பேச்சு வழக்கு ஆகியவற்றை அழகாக திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர்.

நடிகராக அறிமுகமாகியுள்ள கஸ்தூரி ராஜா இப்படத்தில் யூசுப்பாகவே வாழ்ந்திருக்கிறார் என்றே கூறலாம்.

அந்தளவிற்கு யதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அபு தாஹிராக நடித்திருக்கும் ஈஷா அமைதியாக உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். எனக்காக ஏன் பேசல என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும் இடத்தில் பேச முடியாமல் நிற்பது, காதலியின் பெயரை குறிக்கும் பாடல்களை ஒலிக்க செய்து ரசிப்பது என தன்னால் முடிந்தவரை அபு தாஹிர் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

மாளவிகா மனோஜ் நிலாஃபர் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருத்தி போகிறார். அவருக்கு வசனங்கள் என்பதே இல்லை என்றாலும் கண்களிலேயே அவற்றை கடத்துகிறார்.

நடிகர்களின் பங்களிப்பு, காட்சியமைப்புகள், திரைக்கதை செல்லும் விதம், பின்னணி இசை ஆகியவை நேர்த்தியாக அமைந்துள்ளன.

ஆனால், இரண்டாம் பாதி நீளமாக செல்லும் உணர்வைத் தருவதை தவிர்க்க முடியவில்லை.

சாம் சி.எஸ் பின்னணி இசை மற்றும் பாடல்களில் விளையாடியிருக்கிறார். மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு, மொஹம்மது அமீனின் எழுத்து மற்றும் மதியின் படத்தொகுப்பு சிறப்பு. 

க்ளாப்ஸ்

கதை மற்றும் திரைக்கதை

சுவாரஸ்யமான காட்சியமைப்புகள்

நடிகர்கள்

பின்னணி இசை

பல்ப்ஸ்

இரண்டாம் பாதியின் நீளத்தை குறைத்திருக்கலாம்


மொத்தத்தில் இந்த ஹபீபி ஒரு நேர்த்தியான படைப்பு. அனைத்து சமூகத்தினரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *