Pati Patni Aur Woh Do: திரை விமர்சனம்

ஆயுஷ்மான் குர்ரானா, வாமிகா கேபி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாரா அலி கான் நடிப்பில் வெளியாகியுள்ள Pati Patni Aur Woh Do இந்தி திரைப்படத்தின் விமர்சனத்தை காண்போம் வாங்க.
கதைக்களம்
உத்தரபிரதேசத்தில் வனத்துறையில் சீனியர் அதிகாரியாக இருப்பவர் பிரஜாபதி பாண்டே(ஆயுஷ்மான் குர்ரானா). அவரது மனைவி அபர்ணா (வாமிகா கேபி) மீடியாவில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முயற்சித்து வருகிறார்.
இந்த சூழலில் பிரஜாபதியைக் காண கல்லூரித் தோழியான சன்சல் குமாரி (சாரா அலி கான்) அவரது அலுவலகத்திற்கு வருகிறார்.
தான் மந்திரியின் மகன் சன்னியை காதலிப்பதாகவும், அவருடன் வெளியே செல்லும்போது யாரோ புகைப்படம் எடுத்து செய்திகளில் வெளியிட, முகத்தை மூடியபடி இருக்கும் பெண் யார் என்று தேட ஆரம்பித்து விட்டார்கள் என்றும் கூறுகிறார்.
அதன் காரணமாக தங்கள் காதலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் காதலன் போல் நடித்து உதவ வேண்டும் என்று சன்சல் குமாரி உதவி கேட்கிறார்.
வேறு வழியின்றி பிரஜாபதியும் அவருக்கு உதவ, தன் மகன் காதலிக்கும் பெண் யார் என்று கண்டுபிடித்து தர வேண்டும் என பத்திரிகையாளரான அபர்ணாவிடம் மந்திரி கேட்கிறார்.
இதற்கிடையில் பிரஜாபதிக்கு யாரோ ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அபர்ணா சந்தேகிக்கிறார்.
அதே சமயம் அவருடன் வேலை பார்க்கும் நிலோபருடனும் (ரகுல் பிரீத் சிங்) தன் கணவருக்கு தொடர்பு இருப்பதாகவும் நினைந்து அதிர்ச்சியடைகிறார்.
அதன் பின்னர் பிரஜாபதி தன் மீது தவறில்லை என்று எப்படி நிரூபித்தார்? சன்சல் குமாரியின் காதலை அவர் சேர்த்து வைத்தாரா? என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
2019ஆம் ஆண்டில் வெளியாகி சக்கைப்போடு போட்ட Pati Patni Aur Woh திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக, முடஸ்ஸர் அஸிஸ் இப்படத்தை எடுத்துள்ளார்.
கணவனை சந்தேகப்படும் மனைவி இறுதியில் எப்படி உண்மையை புரிந்துகொண்டார் என்ற கதைக்கருவை எடுத்துக்கொண்டு முடிந்தவரை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.
பல காட்சிகளில் காமெடி ஒர்க்அவுட் ஆகியிருந்தாலும் காட்சிகள் பெரும்பாலும் பார்த்து பழகிப்போனவை என்பதால் பெரிதாக சுவாரஸ்யம் இல்லாமலேயே படம் நகர்கிறது.
அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் வரப்போகின்றன என்பதை எளிதாக யூகிக்கக்கூடிய வகையில்தான் திரைக்கதை உள்ளது.
கிளைமேக்ஸ் நம்ம சுந்தர்.சி படத்தைப் போல எல்லா கதாபாத்திரங்களும் ஓர் இடத்தில் வரவழைக்கப்பட்டு களேபரம் நடக்கிறது.
தாமா படத்திற்கு பிறகு ஆயுஷ்மான் குர்ரானா மீண்டும் முழுக்க முழுக்க காமெடி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தன்னால் முடிந்தவரை படம் முழுக்க காமெடி செய்து காப்பாற்ற முயற்சித்திருக்கிறார் ஆயுஷ்மான்.
குறிப்பாக சாராவிற்கு உதவும் காட்சிகளில் செம அலப்பறை செய்திருக்கிறார்.
சாரா நடிப்பில் கொஞ்சம் ஓவர் டோஸ் செய்திருக்கிறார். ஆனால் வாமிகாவும், ரகுலும் தங்கள் கதாபாத்திரத்தை மிகையில்லாமல் செய்துள்ளனர்.
போலீசாக வரும் விஜய் ராஸ் ‘இவன் என்னப்பா இப்படி கலர்புல் ஆக இருக்கான்’ என்று கூறும் காட்சிக்கு அரங்கம் அதிர்கிறது.
பாடல்கள் ஓகே ரகம். ஜிஷ்ணுவின் கேமராஒர்க், நினத்தின் எடிட்டிங் சிறப்பு.
க்ளாப்ஸ்
நடிகர்களின் பங்களிப்பு
காமெடி காட்சிகள்
பின்னணி இசை
பல்ப்ஸ்
பார்த்து பழகிய காட்சிகள்
யூகிக்கக்கூடிய திரைக்கதை






