அதிரடி (மலையாளம்): திரை விமர்சனம

டோவினோ தாமஸ், பேசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள ‘அதிரடி’ மலையாளத் திரைப்படம் எப்படி இருக்குன்னு பார்ப்போம் வாங்க.
கதைக்களம்
கேரளாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பரபரப்பாக கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் முக்கியமான நிகழ்ச்சி ஆரோகன் பெஸ்ட்.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பல மாணவர்கள் உள்ளே நுழைய முடியாதபடி தடுத்து வைக்கப்படுகிறார்கள்.
ஆனால், மாணவர் விஷ்ணு தவறான நேரத்தில் அந்த கேட்டினை திறந்துவிட, கட்டுக்கடங்காத கூட்டம் மேடையை நோக்கி ஓடி வருகிறது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி தர்ஷனா உட்பட மூன்று பேர் இறந்து விடுகிறார்கள்.
இதனால் கலை நிகழ்ச்சிகளுக்கு அந்த கல்லூரியில் தடை விதிக்கப்படுகிறது. இந்த சூழலில் சிவில் என்ஜினீரிங் பிரிவில் முதலாமாண்டு மாணவராக பேசில் ஜோசப் சேருகிறார்.
ரியா சிபுவை பார்த்தவுடனேயே காதலில் விழும் பேசில் அவரை எப்படியாவது ஈர்க்க வேண்டும் என்று முயற்சிக்கிறார். அதே சமயம் காதலியை இழந்த துயரத்தில் அண்ணன் விஷ்ணு இருப்பதையும் பார்த்து கவலைப்படுகிறார்.
அண்ணனை மீட்கவும், காதலியை அடையவும் நிறுத்தப்பட்ட ஆரோகன் பெஸ்ட்டை நடத்த முயற்சிக்கிறார். அந்த முயற்சியில் டோவினோ தாமஸால் தடைகள் வர, அதனை எப்படி முறியடித்து நிகழ்ச்சியை நடத்தினார் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களான பேசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகிய மூவரை வைத்து டீஸர் ஒன்றை வெளியிட்டபோதே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது.
படத்தின் டைட்டிலை வைத்து பார்க்கும்போதும் ஏதோ ஒரு பெரிய சம்பவம் செய்யப் போகிறார்கள் என்றே உள்ளே அழைத்து செல்கிறார் இயக்குநர்.
ஆனால், வழக்கமான ஒரு கல்லூரி கதை, அதில் ஒரு ரௌடி வருவதால் ஏற்படும் குழப்பம் எனும் திரைக்கதையைத்தான் அமைத்திருக்கிறார் இயக்குநர் அருண் அனிருதன்.
பேசில் வந்ததும் ஜாலியான படமாக ஆரம்பித்து சுவாரஸ்யமான இடைவேளையாக முடிகிறது. இரண்டாம்பாதியில் பேசில் ஏதோ செய்யப்போகிறார் என்று பார்த்தால், இன்டெலிஜென்ட்டாக எதுவுமே செய்யாதது ஏமாற்றம்.
டொவினோவைப் பொறுத்தவரை தனக்கான கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.
ஆனால், அந்த கதாபாத்திரத்தின் தன்மை ஒரு கட்டத்தில் மாறி நம்மையும் ஏமாற்றி விடுகிறது.
பிரபலமானவராக வரும் வினீத் ஸ்ரீனிவாசனுக்கு நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் இல்லை. ரியா சிபுவிற்கு இன்னும் அழுத்தமான கதாபாத்திரத்தை தந்திருக்கலாம்.
முதல் பாதி கலாட்டாவாக செல்கிறது; இரண்டாம் பாதிதான் இழுவைவோ இழுவை.
பார்த்து பழகிய காட்சிகள் என்பதால் எதிலும் சுவாரஸ்யம் இல்லை.
சாமுவேல் ஹென்றியின் கேமரா ஒர்க் கண்களுக்கு விருந்து மற்றும் கலர்புல்லாக காட்சிகள் உள்ளன. விஷ்ணு விஜயின் இசை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மூன்று முக்கிய நடிகர்கள் கிடைத்தும் இயக்குநர் அவர்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறியிருக்கிறார்.
க்ளாப்ஸ்
நடிகர்கள்
டெக்னிக்கல் ஒர்க்
சண்டைக்காட்சி
பல்ப்ஸ்
வலுவில்லாத கதைக்களம்
யூகிக்கக்கூடிய திரைக்கதை
படத்தின் நீளம்






