'பல மொழிகளில் நடித்தாலும்…அதற்காக எப்போதும் காத்திருப்பேன்' – ரெபா மோனிகா ஜான்

சென்னை,
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ரெபா மோனிகா ஜான். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016-ம் ஆண்டு “ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம்” என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர்.
மேலும், தமிழில் 2018-ம் ஆண்டு ஜெய் நடித்த “ஜருகண்டி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர். பின்னர், விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, 2019-ம் ஆண்டு கன்னட திரைப்படத்திலும் நடித்து அறிமுகமானார். தெலுங்கில் கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள’மேட் ஸ்கொயர்’ படத்தில் சுவாதி ரெட்டி என்ற பாடலுக்கு ரெபா நடனமாடி இருந்தார்.
தற்போது ஹுசைன் ஷா கிரண் இயக்கும் ‘மிருத்யுஞ்சய்’ படத்தில் நாடித்து வருகிறார். இந்நிலையில், மலையாள படங்களில் நடிக்க எப்போதும் ஆர்வமாக இருப்பதாக ரெபா மோனிகா கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
‘நான் மலையாள சினிமாவின் மூலம்தான் சினிமா கெரியரை தொடங்கினேன். இதனால், கேரளாவை எனது சொந்த வீடு போல் உணர்கிறேன். நான் தற்போது வேறு மொழிகளில் நடித்தாலும், மலையாள ஸ்கிரிப்ட்களைக் கேட்பதற்கும் வலுவான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கும் எப்போதும் ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.