அரசன் ஷூட்டிங் நிறுத்தம்.. சிம்புவுக்கு ஆதரவாக டிஆர் காட்டமான கேள்வி! நடிகர் சங்கம் வராதது ஏன்?

அரசன் படத்தின் ஷூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டு இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
வெற்றிமாறனின் வடசென்னை பின்னணியில் இந்த படத்தின் கதை இருக்கிறது. ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் FEFSI அமைப்பு போட்ட தடையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.
வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் சிம்புவுக்கு ஒரு புது படத்திற்கு 5 கோடி அட்வான்ஸ் கொடுத்தார். படத்தின் முதற்கட்ட பணிக்கும் பெரிய தொகையை அவர் செலவழித்து இருக்கிறார். அந்த தொகையை திருப்பி தரவேண்டும் என சிம்பு மீது ஐசரி கணேஷ் புகார் கொடுத்திருக்கிறார். அந்த பிரச்சனை காரணமாக தான் அரசன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.
டிஆர் காட்டம்
இந்நிலையில் அரசன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருப்பதற்க்கு சிம்புவின் அப்பா டிஆர் கண்டனம் தெரிவித்து பேசி இருக்கிறார்.
‘தயாரிப்பாளர் சங்கமும், அதற்கு துணையாக இருக்கும் தென்னிந்திய தொழிலாளர் சம்மேளனமும் அறம் தவறி நடக்க கூடாது. ஐசரி கணேஷ் வழக்கு தொடர்ந்தபோது சிம்புவின் பிரதிநிதியாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி நான் வென்று வந்திருக்கிறேன். அட்வான்ஸ் தொகை சிம்புவுக்கே சொந்தம் என தீர்ப்பு வழங்கினார் நீதிபதி.’
‘அந்த வழக்கை காட்டி அரசன் ஷூட்டிங்கை நிறுத்தி இருக்கிறார்கள். தயாரிப்பாளருக்காக தயாரிப்பாளர் சங்கம் வரும்போது, ஒரு நடிகருக்கான தென்னிந்திய நடிகர் சங்கம் உடன் நிற்க வேண்டும். போராட வேண்டும். உரிமையை பெற்று கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றேன்.’
இவ்வாறு டி.ஆர் கூறி இருக்கிறார்.






