விஸ்வநாத் & சன்ஸ்: திரைவிமர்சனம்

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி உள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம், வாங்க.
கதைக்களம்
பரம்பரை பணக்காரரான சூர்யா (சஞ்சய் விஸ்வநாத்) ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்புகிறார். தனது மகன் தங்கம் வென்று வந்த மகிழ்ச்சியில் ராதிகா இருந்தாலும், 42 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறானே என்கிற கவலையில் இருக்கிறார்.
ஆனால், இந்த குடும்பத்திற்கு ஒரு வாரிசு வேண்டும் என்று ராதிகா தொடர்ந்து சூர்யாவிடம் கூறி வருகிறார். இதனால் வாடகைத் தாய் மூலம் குழ்நதையை பெற்றெடுக்கிறார் சூர்யா. தனது பேரனை ராதிகா மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்கிறார்.
இந்த சமயத்தில் அந்த குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக, அவனுக்கு உடனடியாக bone marrow transplant அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர் கூறுகிறார். ஆனால், குழந்தையின் தாயின் எலும்புதான் இதற்கு சரியாக இருக்கும், அவரை உடனடியாக அழைத்து வாருங்கள் என கூறுகிறார்கள்.
இதனால் உடனடியாக வெளிநாட்டிற்கு புறப்படும் சூர்யா, அங்கு தன் குழந்தையின் அம்மாவான மமிதா பைஜூவை சந்தித்து, சூழ்நிலையை எடுத்துக்கூறி, அவரை இந்தியாவிற்கு அழைத்து வருகிறார். குழந்தைக்காக வரும் மமிதா பைஜூவிற்கு சூர்யா மீது காதல் ஏற்படுகிறது; நான் உன்னை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என அவர் கூறுகிறார். ஆனால், சூர்யா மமிதாவை ஏற்க மறுக்கிறார். சூர்யா மனம் மாறினாரா இல்லையா? இவர்களின் காதல் இணைந்ததா இல்லையா? என்பதே படத்தின் மீது கதை..
படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் சூர்யா, இவருக்கு நடிப்பை சொல்லித்தர வேண்டிய அவசியமே இல்லை. வழக்கம்போல் இப்படத்திலும் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். கண்டிப்பு, மறைந்திருந்து காதலை காட்டுவது, நகைச்சுவை என தனது நடிப்பால் திரைக்கதையை அழகாக கொண்டு சென்றுள்ளார்.
கதாநாயகி மமிதா பைஜூ, இப்படத்தில் சூர்யாவுக்கு நிகரான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சுறுசுறுப்பான பெண்ணாக வரும் இவரது சேட்டைகளும் ரசிக்க வைக்கின்றன. நடிகை ராதிகா சரத்குமாரின் அனுபவ நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். மேலும், ரவீனா டாண்டன், சுனில் ரெட்டி உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் சிறப்பு.
இயக்குநர் வெங்கி அட்லூரி, 20 வயது வித்தியாசம் உள்ள இருவரின் காதலை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதில் குழந்தை, அம்மா, உறவுகள் என பல உணர்ச்சிகளை திரைக்கதையில் அடக்கிய விதம் நன்றாக இருந்தது. நகைச்சுவையாக காட்சிகளை கொண்டு சென்ற விதமும் ரசிக்க வைத்தது.
ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவாக இருந்தது. இதனால் சில நல்ல காட்சிகளில் கூட தொய்வு ஏற்படும்படி அமைந்துவிட்டது. மேலும், எமோஷனல் கனெக்ட் கதையோடு இன்னும் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும்; அதுவும் மிஸ்ஸிங். சண்டை காட்சிகள் ஒர்ஸ்ட்.
ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். சூர்யாவின் வீடு, மருத்துவமனை காட்சிகள், திருமண காட்சிகள் என அனைத்தையும் அழகாக காட்டியுள்ளார். ஜி.வி. பிரகாஷின் இசையில் உருவான இப்படத்தில், பட்டாம்பூச்சி மற்றும் அம்மாவுக்காக வந்த பாடலை தவிர்த்து வேறு எதுவும் மனதை தொடவில்லை. பின்னணி இசையும் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.
பிளஸ் பாயிண்ட்ஸ்
சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார்
கதைக்களம்
இடைவேளை
நகைச்சுவை காட்சிகள்
ஒளிப்பதிவு
மைனஸ் பாயிண்ட்
திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவு
மொத்தத்தில், குறைகள் இருந்தாலும் இந்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தை குடும்பத்தோடு கண்டிப்பாக பார்க்கலாம்.






