மொத ராத்திரி: திரை விமர்சனம்
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் எப்படி உள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம், வாங்க.
கதைக்களம்
கதாநாயகன் ரிஷிகாந்த் (மருதநாயகம்), தான் காதலித்த பெண் தற்கொலை செய்துகொண்டதால், திருமணமே தனக்கு வேண்டாம் என்கிற முடிவில் இருக்கிறார். துபாயில் 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் மருதுநாயகத்திற்கு திருமணம் ஏற்பாடுகளை அவருடைய குடும்பம் செய்துவிடுகிறார்கள்.
தனக்கு திருமணம் என்று சொன்னால் மருது ஊருக்கு வரமாட்டான் என்பதால், குழந்தைக்கு காது குத்து வைத்திருக்கிறோம் என பொய் சொல்லி வரவழைக்கிறார்கள். ஊருக்கு வந்தபின்தான் மருதுவுக்கு தனக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்கிற விஷயமே தெரியவருகிறது. என்ன நடந்தாலும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என உறுதியாக இருக்கும் மருதுவை, பல சென்டிமெண்டான விஷயங்களை கூறி எப்படியோ திருமணமத்திற்கு சம்மதிக்க வைத்துவிடுகிறார்கள்.
மறுபக்கம் கதாநாயகி அனிஷ்மா அனில்குமார் (முத்துச்செல்வி) தனது காதலுடன் ஓடிப்போக திட்டமிட்டுள்ளார். ஆனால், காதலன் சரியான நேரத்திற்கு வராத காரணத்தினால் பிடிக்காமல் மருத்துநாயகத்தை திருமணம் செய்துகொள்கிறார். திருமணத்திற்கு பிறகு மொத ராத்திரி அப்போது காதலனுடன் ஓடிப்போக திட்டமிடுகிறார். இது மருதுவுக்கு தெரியவர, தான் நினைத்த பெண்ணோடுதான் வாழமுடியாமல் போய்விட்டது, அவளாவது பிடித்தவனுடன் சென்று வாழட்டும் என இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார்.
இந்த சமயத்தில் முத்துச்செல்வியின் காதலன் திடீரென அவளை விட்டு ஓடிவிடுகிறான். காதலன் நம்பி வந்து நட்டாத்தில் இருக்கிறாள் முத்துச்செல்வி. அவளுக்கு உதவ வந்து கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல் நிற்கிறான் மருது. இதன் பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி தேர்ந்தெடுத்த கதைக்களம் வித்தியாசமாக இருந்தது. ஏற்கனவே சில இடங்களில் நாம் கேள்விப்பட்ட விஷயங்களாக இருந்தாலும், அதை வைத்து அழகாக திரைக்கதையை வடிவமைத்துள்ளார். ஆங்காங்கே சில தொய்வுகள் இருந்தாலும் கூட, திரைக்கதையில் நாமும் சேர்ந்து பயணிப்பது போல் கொண்டு சென்ற விதம் சிறப்பு.
படத்தின் மிகப்பெரிய பலமே கதாபாத்திரங்களின் வடிவமைப்பது தான். திருமணத்தில் சண்டை இழுக்கும் சித்தப்பா, திருமணத்தை பிரச்சனை இல்லாமல் நடத்தி முடிக்வவேண்டும் என தவிக்கும் இரு வீட்டார், திருமணத்திற்கான வேலைகளை தலையில் தூக்கி போட்டுகொண்டு செய்யும் மாமா, சாமியாராக வரும் சேத்தன், பிடிக்காமல் திருமணம் செய்துகொள்ளும் ஹீரோ, ஹீரோயின் அதனால் அவர்கள் சந்திக்கும் விளைவுகள் என கதாபாத்திரங்களை சுவாரஸ்யமான வகையில் வடிவமைத்துள்ளார் இயக்குநர். படத்தில் மிகப்பெரிய கலாட்டா நடந்தாலும், அதனுடன் சேர்ந்த நகைச்சுவை காட்சிகளும் ரசிக்கும்படி அமைந்துள்ளன.
மொத ராத்திரியின் போது ஓடிப்போக நினைக்கும் முத்துச்செல்வி, அவளுக்கு உதவ வரும் மருது, காதலன் விட்டு சென்றபின் கூட துணையாக இருக்கும் காட்சிகள், அவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்த சேத்தன் மற்றும் அவர் பேசிய வசனங்கள், சாமி வைத்து செய்த சில விஷயங்கள், மருது தனது காதலி குறித்த எமோஷனலாக பேசிய காட்சி, தீண்டாமை குறித்து காட்டப்பட்ட காட்சி, வீட்டிற்குள் பெண்களுக்கு இடையே நடக்கும் வாக்குவாதம் மற்றும் சண்டை, குடித்துவிட்டு அடிக்கொள்ளும் ஆண்கள் என படத்தில் பல சிறப்பான காட்சிகளை பக்காவாக திரைக்கதையோடு இணைத்துள்ளார் இயக்குநர் ராஜா கருப்பசாமி.
இதையெல்லாம் விட மிக சுவாரஸ்யமாக இருந்தது காதலியுடன் ஊரை விட்டு ஓடவேண்டும் என்பதற்காக நிதீஷ் கதாபாத்திரம் செய்த கலாட்டாக்கள். இயக்குநராக மட்டுமின்றி நிதீஷ் என்கிற ரோலிலும் நடித்து கைதட்டல்களை சொந்தமாக்கியுள்ளார் இயக்குநர் ராஜா கருப்பசாமி.
இதுவரை துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரிஷிகாந்த் இப்படத்தில் ஹீரோவாக நம் கவனத்தை ஈர்த்துள்ளார். யூத் படத்தில் அழகாக நடித்த அனிஷ்மாவின் நடிப்பு இப்படத்தில் நன்றாக பக்குவமாகியுள்ளது. தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக புரிந்து, தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் தனது மொத்த அழுத்தத்தையும் வெளிப்படுத்தியது சிறப்பாக இருந்தது.
இவர்களை தாண்டி சேத்தன், இயக்குநர் வெங்கடேஷ், அப்தூல், பகவதி, சுமித்ரா தேவி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும், நடிகைகளும் சிறப்பாக நடித்துள்ளார்கள். எந்த ஒரு குறையும் இல்லை. ஒளிப்பதிவு, பின்னணி இசை படத்திற்கு பலம். டெக்னிக்கள் ஒர்க்ஸ் எல்லாம் சூப்பர்.
பிளஸ் பாயிண்ட்
ராஜா கருப்பசாமி இயக்கம்
ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார்
நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு
திரைக்கதை
நகைச்சுவை காட்சிகள்
இரண்டாம் பாதி
ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை
மைனஸ் பாயிண்ட்ஸ்
பெரிதாக ஒன்றும் இல்லை

