போதை விருந்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள்- போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் | Cinema celebrities who participated in a drug party

மும்பை,
மராட்டிய மாநிலம் சாங்கிலியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.252 கோடி எம்.டி. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் துபாயில் வசித்து வரும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த முகமது சலீம் என்ற லாவிசுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் கடந்த மாதம் துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டார். அவரை மும்பை காட்கோபர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இந்தி நடிகர், வில்லன் நடிகரின் மகன், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு விசாரணையில் சிக்கிய நடிகை மற்றும் அவரது மகள், இயக்குனர், ராப் பாடகர்கள், தாதா தாவூத் இப்ராகிம் கும்பலை சேர்ந்தவர்கள், மும்பையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களுக்கு முகமது சலீம் போதை விருந்துக்கு ஏற்பாடு செய்தது தெரியவந்தது. இதில் அவர்கள் கலந்து கொண்டதும் தெரியவந்துள்ளது.






