"கூலி" இசை வெளியீட்டு விழாவிற்கு கிளம்பும் முன் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.
‘கூலி’ படத்தில் இடம் பெற்றுள்ள சிக்கிடு, மோனிகா மற்றும் பவர் ஹவுஸ் பாடல்கள் வெளியாகி மக்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் புரோமோஷன் பணிகள் தீவரமாக நடைபெற்று வருகின்றன.
ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டுவிழா இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் டிரெய்லர் மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் ‘கூலி’ பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்னை நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த்தை கண்டதும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடினர். ரசிகர்கள் மத்தியில் ரஜினி கைகளை அசைத்து உற்சாகமடைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கூலி படம் மீது ரசிகர்களிடம் உள்ள எதிர்பார்ப்பு எனக்கும் உள்ளது. அதே எனர்ஜியோடு நானும் இருக்கிறேன். ஆண்டவன் இருக்கான்” எனக் கூறி சென்றார்.