கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்; துணை நடிகருக்கு முன் ஜாமீன் வழங்கிய கோர்ட்டு

தமிழ் சினிமாவில் துணை நடிகராக உள்ளவர் ரவிச்சந்திரன். இவர் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இதனிடையே, இவர் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சென்னையில் அகரம் அறக்கட்டளை ஆண்டு விழா நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசிய சில கருத்துகளுக்கு துணை நடிகர் ரவிச்சந்திரன் யூடியூப் சமூகவலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்து வீடியோ பதிவிட்டிருந்தார். மேலும், கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வீடியோ பதிவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து ரவிச்சந்திரனுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தனக்கு முன் ஜாமீன் கோரி ரவிச்சந்திரன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, துணை நடிகர் ரவிச்சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.