Dhamaal 4: திரை விமர்சனம்

அஜய் தேவ்கன், ரித்தேஷ் தேஷ்முக், அர்ஷத் வர்ஷி, ஈஷா குப்தா நடிப்பில் வெளியாகியுள்ள தாமால் 4 இந்தி திரைப்படம் பார்வையாளர்களை கவர்ந்ததா என்று பார்ப்போம் வாங்க.
கதைக்களம்
ஆலியாவை (ஈஷா குப்தா) காதலிக்கும் குட்டு ரஸ்தோகி (அஜய் தேவ்கன்) எப்படியாவது அவரது பிள்ளைகள் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று போராடுகிறார்.
தனது சகா ஜானியுடன் (சஞ்சய் மிஷ்ரா) உடன் ஆலியாவின் வீட்டிற்கு செல்லும் குட்டுவை பேய்கள் மிரட்டுகின்றன.
பின்னர்தான் அது ஆலியாவின் மகள், மகனின் சேட்டைகள் என்று தெரிய வருகிறது. அதிலிருந்தே அவர்களது தன்னை பிடிக்கவில்லை என்று உணரும் குட்டு, காதலி ஆலியாவின் அறிவுறுத்தலின்படி அவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறார்.
அதே சமயம் பணக்கார பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் தேஷ்பந்து (ரித்தேஷ் தேஷ்முக்), கோவிலில் சந்திக்கும் பாரோவை (அஞ்சலி ஆனந்த்) பணக்காரவீட்டு பெண் என்று தவறுதலாக புரிந்துகொள்கிறார்.
அவரிடம் காதலிப்பதாகக் கூறி திருமணமும் செய்துகொண்ட பின்தான், பாரோ ஒரு டிரைவரின் மகள் என்ற உண்மை தெரிய வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, தனது சகோதரரின் வெகுளித்தனத்தால் கோபத்தில் வெளியேறிய மனைவி சஞ்ஜீதா (ரோஸி) உடன் சேர போராடுகிறார் ஆதித்யா (அர்ஷத் வர்ஷி).
ஒருவழியாக அவருடன் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு கிடைக்க, குட்டு மற்றும் தேஷ்பந்து, ஆதித்யா அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்க நேரிடுகிறது.
அப்போது குட்டுவுக்கு மட்டுமே தெரிந்த புதையல் இரகசியம் ஆதித்யா, தேஷ்பந்துவுக்கு தெரிய வருகிறது. அதனால் தனித்தனியாக புதையலைத் தேடி அனைவரும் கிளம்ப, இறுதியில் யாருக்கு புதையல் கிடைத்தது என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
அஜய் தேவ்கன் தயாரிப்பாளராகவும் இருந்து ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை முந்தைய பாகங்களை இயக்கிய இந்திரா குமாரே இயக்கியுள்ளார்.
புதையல் குறித்த விஷயங்களை ஆரம்ப காட்சியிலேயே காட்டிய இயக்குநர், அதன் பின்னர் வேறொரு தளத்தில் கதையைக் கொண்டு செல்கிறார்.
குறிப்பாக ரித்தேஷின் கதை தனியாகவும், அஜய் தேவ்கனின் கதை பேய் படம் போலவும் செல்ல, அர்ஷத்தின் கதை வேறு தளத்தில் நகர்கிறது.
இதெல்லாம் முடிந்து எப்போது எல்லோரும் புதையலைத் தேடி செல்லப் போகிறார்கள் என்ற கேள்வியே நமக்கு எழுகிறது.
அதிலும் இடைவேளை வரை மூவரின் கதைகளிலும் பெரிய சுவாரஸ்யம் இல்லை. அஜய் தேவ்கன், சஞ்சய் மிஷ்ராவின் கூட்டணி சிரிக்க வைக்க, அர்ஷத் மற்றும் ஜாவேத்தின் காமெடி ஓகே ரகம்.
ஆனால் ரித்தேஷின் எபிசோடில் வரும் பாடி ஷேமிங் காமெடியை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆரம்பத்தில் கடற்கொள்ளையனாக வரும் ரவி கிஷன் பின்னர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.
இடைவேளை வரை ஏனோதானோ என பார்த்து பழகிய காட்சிகளில் படம் நகர்ந்து, அதன்பின்னர் புதையலைத் தேடியே செல்கிறார்கள்.
அங்கும் பெரிய சோதனைகளை அவர்களை எதிர்கொள்ளவில்லை. எல்லாமே சிறுபிள்ளைத்தனமாகவே உள்ளன. ஒருவேளை குழந்தைகளை மட்டுமே வைத்து காமெடியை யோசித்துப்பார்க்கள் போலும்.
ஆங்காங்கே சிறு சிறு காமெடிகளைத் தவிர்த்து வேறு எங்கும் சுவாரஸ்யம் இல்லை; ஆனாலும் 5வது பாகம் உறுதி எனக் கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறது படக்குழு.
கிராஃபிக்ஸ் பல இடங்களில் பிசுறுத்தட்ட, செட்கள் அப்பட்டமாக தெரிகின்றன. பாடல்கள் ஓகே ரகம். படத்தொகுப்பாளர் சஞ்சய் சங்க்லா இன்னும் கத்திரி போட்டிருக்கலாம்.
க்ளாப்ஸ்
அஜய் தேவ்கன், சஞ்சய் மிஷ்ரா கூட்டணி
சிறு சிறு காமெடிகள்
பல்ப்ஸ்
சொதப்பலான திரைக்கதை
பார்த்து பழகிய காட்சிகள்
க்ரிஞ்ச் காமெடிகள்
மொத்தத்தில் இந்த தமால் 4 சோதனை மேல் சோதனை.






