நிலாவுடன் வீட்டை விட்டு வெளியேறும் சோழன்… அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ

அய்யனார் துணை
கடந்த வாரம் அய்யனார் துணை சீரியலில், காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடி வந்து கோவிலில் திருமணம் செய்யவிருந்தனர். அவர்கள் இருவரும் சோழன் காரில் பயணிக்க, ஒரு கட்டத்தில் அவர்களுக்கு உதவி செய்ய சோழன் முடிவு செய்தார்.
ஆனால், மணப்பெண்ணின் மாமா கோவிலுக்கு வந்துவிட, காதலன் தெறித்து ஓடிவிட்டான். அங்கு வந்த அந்த பெண்ணின் மாமா, சோழன் தான் மாப்பிள்ளை என தவறாக புரிந்துகொண்டு, அவரை அடித்து வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார்.
அதன்பின் சோழனின் வீட்டிற்கு இந்த விஷயம் தெரியவர, நிலா, சேரன் மற்றும் பாண்டியன் ஆகியோர் வந்தனர்.
உடனடியாக சேரன், பாண்டியன் இருவரும் சோழன்தான் இப்படி செய்துள்ளார் என அவர் மீது நம்பிக்கை வைக்காமல் பேசிவிட்டனர். இதனால் சோழன் அங்கேயே மனமுடைந்து போய்விட்டார். இதன்பின், நிலா சாதுர்யமாக பேசி சோழன் மீது எந்த தவறும் இல்லை என நிரூபித்தார். இந்த பிரச்சனையில் இருந்து சோழனும் வெளியே வந்துவிட்டார்.
ஆனால், தன்னுடைய அண்ணனும் தம்பியும் தன்னை நம்பவில்லை என கடும் கோபத்தில் இருந்தார் சோழன்.
இந்த நிலையில், அய்யனார் துணை சீரியலின் வரும் வாரத்திற்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
வீட்டை விட்டு வெளியேறும் சோழன்
வீட்டிற்கு வரும் சோழன், தனது அண்ணன் சேரனிடமும், தம்பி பாண்டியனிடமும் கோபமாக பேசுகிறார். ‘என்னை பற்றி யார் எது சொன்னாலும் அப்படியே நம்பி விடுவீர்களா?” என சோழன் கேட்கிறார். “ஏற்கனவே ஒரு முறை நாம் அப்படி திருமணம் செய்ததால், மீண்டும் அதையே செய்வேன் என முடிவு செய்து விட்டீர்களா? நிலாவோடு சேர்ந்து வாழ வேண்டும் என சொல்லிவிட்டு, வேறொரு பெண்ணை கல்யாணம் பண்ண நான் என்ன பைத்தியமா” என கூறுகிறார்.
இதன்பின், தன்னை தன்னுடன் பிறந்தவர்களே நம்பவில்லை என்பதால், நிலாவை அழைத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறுகிறார் சோழன். பரபரப்பான சூழலில் அய்யனார் துணை கதைக்களம் தற்போது நகர, இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






