அவரை மனதில் வைத்துதான் “டியூட்” படத்தின் கதையை எழுதினேன்- இயக்குனர் கீர்த்தீஸ்வரன் | I wrote the story of “Dude” with him in mind

சென்னை,
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “டியூட்”. இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் உருவாகியுள்ளார். இவர் இயக்குனம் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 17-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இயக்குனர் கீர்த்தீஸ்வரன் “டியூட்” படம் குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டியூட் படத்தின் கதை எழுதத் தொடங்கியபோதே ரஜினி சாருக்கு 30 வயதிருந்தால் எப்படி இந்தக் கதையில் நடித்திருப்பார் என மனதில் வைத்துதான் எழுதினேன். அதில் பிரதீப் ரங்கநாதன் பொருந்தி இருக்கிறார். படத்தில் பிரதீப்- மமிதா இருவரும் ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி வைத்து நடத்துவார்கள். முழுக்க முழுக்க சென்னையில் தான் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். இயக்குநராக என்னுடைய முதல் படமே தீபாவளிக்கு வெளியாவது என் கனவு நனவாகியது போல உள்ளது” இந்தப் படத்திற்கு மமிதாவை நான் சொன்னபோது அவரின் ‘பிரேமலு’ படம் கூட வெளியாகியிருக்கவில்லை. ‘சூப்பர் சரண்யா’ படம் பார்த்துதான் அவரை தேர்ந்தெடுத்தோம். மமிதா கதைக்குள்ளே வந்தவுடன் ‘ரஜினி- ஸ்ரீதேவி’ இணைந்து நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி படம் வந்திருக்கிறது எனத் தோன்றுகிறது” என்றார். பிரதீப், மமிதாவுடன் நடிகர்கள் சரத்குமார், ரோகிணி, பரிதாபங்கள் புகழ் டேவிட் ஆகியோரும் நடித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.