கனடா நாட்டில் இசையமைப்பாளர் பரத்வாஜூக்கு பாராட்டு விழா

‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘ஜெமினி’, ‘ரோஜாக்கூட்டம்’, ‘பாண்டவர் பூமி’, ‘ஆட்டோகிராப்’ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து, ஏராளமான ‘ஹிட்’ பாடல்களை கொடுத்தவர், பரத்வாஜ். 10 ஆண்டுகளுக்கு முன்பு 1,330 திருக்குறளை, 1,330 பாடகர்களை பாட வைத்து, திருக்குறள் முழுவதையும் இசை வடிவில் உருவாக்கி அசத்தியிருந்தார்.
இதனை போற்றும் வகையில் கனடா நாட்டில் டொராண்டோ தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் பரத்வாஜூக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில், ‘குறள் இசையோன்’ என்ற பட்டம் பரத்வாஜூக்கு வழங்கப்பட்டது. மேலும் அந்த நாட்டில் உள்ள தமிழ் பாடகர்கள் பங்கேற்று பரத்வாஜ் இசையமைத்த திருக்குறள் பாடல்களை பாடி ரசிகர்களை பரவசப்படுத்தினர். பரத்வாஜூடன், அவரது மகள் ஜனனியும் சேர்ந்து பாடினார்.
இதுகுறித்து பரத்வாஜ் கூறும்போது, ‘‘12 வருட கடுமையான உழைப்பில் தான் திருக்குறள் இசை ஆல்பம் உருவானது. அதற்கு கிடைத்த கவுரவம் மகிழ்ச்சி தருகிறது”, என்றார்.