மக்களுக்கு பிடிக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன் – நடிகர் சாந்தனு

ஷேன் நிகாமின் 25-வது படமான ‘பல்டி’ படத்தில் சாந்தனு நடித்துள்ளார். உன்னி சிவலிங்கம் இயக்கிய இப்படம் தமிழ், மலையாளத்தில் உருவாகி உள்ளது. இதில், கபடி வீரராக ஷேன் நடித்திருக்கிறார். இப்படத்தில் இவருடன் பிரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தை சந்தோஷ் குருவில்லா தயாரிக்க தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் செப்டம்பர் மாதம் 26 ம் தேதி வெளியாக இருக்கிறது. முதல் பாடலான ஜாலக்காரி வீடியோ பாடல் வெளியாகி வைரலானது. ‘பல்டி’ படத்தின் டிரெய்லர் வெளியானது.
‘பல்டி’ படம் குறித்து சாந்தனு நேர்காணலில் “நான் எப்போதும் சாந்தனுவாக தான் இருக்கிறேன். சாந்தனு பாக்யராஜாக அல்ல. எனது அப்பாவால் தான் எனக்கு சக்கரக்கட்டி பட வாய்ப்பு கிடைத்தது. அப்படம் சரியாக போகாததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் எனக்கு வரவில்லை. இதனையடுத்து எனது அப்பாவால் சித்து படம் கிடைத்தது. அடுத்த சில வருடங்களில் எதோ தவறு நடப்பதாக உணர்ந்தேன், ஆனால் அதற்குள் என்னுடைய மார்க்கெட் போய்விட்டது.
அப்போது தான் சினிமா துறையில் யார் எல்லாம் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்க்க ஆரம்பித்தேன். விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், மணிகண்டன் அவர்களை கவனிக்க ஆரம்பித்தேன். விஜய் சேதுபதி கூட்டத்தில் ஒருவனாக இருப்பார். பின்னர் படிப்படியாக அடிமட்டத்தில் இருந்து உயர்ந்தார். ஆனால் நானோ அடிமட்டத்தில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை. என்னிடம் இல்லாததே அந்த கற்றல் மனப்பான்மைதான் என்பதை உணர்ந்தேன். இவர்களை எடுத்துக்காட்டாக வைத்து அடிமட்டத்தில் இருந்து வளர வேண்டும் என உழைக்கத் தொடங்கியுள்ளேன். மக்களோடு தொடர்புபடுத்தக்கூடிய சாமானிய மனிதனின் கதாபாத்திரங்களை தேர்வு செய்ய ஆரம்பித்தேன். அப்படிதான் தங்கம், புளூ ஸ்டார் படங்களில் நடித்தேன். இப்போது பல்டி என்கிற படத்திலும் நடித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.