அஜித் படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்த இடைக்கால தடை

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அஜித் குமார், திரிஷா உள்பட பலர் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி.
இந்த திரைப்படத்தில் இளையராஜாவின் இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி ஆகிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
இதனிடையே, குட் பேட் அக்லி திரைப்படத்தில் தனது இசையில் ஏற்கனவே வேறு திரைப்படங்களில் வெளியான 3 பாடகளை அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாகக்கூறி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், அனுமதியில்லாமல் பயன்படுத்திய பாடல்களை படத்தில் இருந்து நீக்கவும், இதற்காக 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
அந்த நோட்டீசுக்கு பதிலளித்த பட தயாரிப்பு நிறுவனம், சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றதாகக் கூறியதாகவும், ஆனால் அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை.
இதையடுத்து, தனது அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டத்துக்கு விரோதமானது என்பதால், படத்தில் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குட் பேட் அக்லி படத்தில், இளையராஜாவின் இசையில் ஏற்கனவே வெளியான திரைப்படத்தில் உள்ள 3 பாடல்களையும் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மனு குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.