மனநல மருத்துவமனையில் நடிகை மீரா மிதுன் அனுமதி

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் (வயது 34), பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக கடந்த 2021-ம் ஆண்டு அவர் மீது பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலீசில் புகார் செய்தனர்.
இந்த புகார் குறித்து விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
பின்னர், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது மீரா மிதுன் தொடர்ந்து ஆஜராகாததால் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. பிடிவாரண்டு உத்தரவை நிறைவேற்றும் வகையில் மீராமிதுனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் டெல்லி போலீசார் மூலம் மீரா மிதுன் கண்டுபிடிக்கப்பட்டு அங்குள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ‘மீராமிதுன் டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை சென்னை அழைத்து வர முடியவில்லை. பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் அவரது உடல்நலம் சீரானதும் சென்னை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறோம்’ என கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.