''திருமணத்திற்குப் பிறகு நடிகைகள் மறைந்துவிடுவதில்லை'' – பார்வதி நாயர்

சென்னை,
தமிழில் ‘உத்தம வில்லன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘நிமிர்’. ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கன்னட திரைப்படமான மிஸ்டர் ராணியில் கடைசியாக நடித்திருந்த பார்வதி நாயர், சில மாதங்களுக்குமுன்பு ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் அவர் எந்த படங்களிலும் ஒப்பந்தமாகாதநிலையில், திருமணம் பார்வதி நாயரின் கெரியரை பாதித்து விட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவின.
இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு நடிகைகள் மறைந்துவிடுவார்கள் என்ற கருத்தை உடைக்க வேண்டும் என்று பார்வதி நாயர் கூறி இருக்கிறார்.
அவர் கூறுகையில், “நான் இருக்கிறேன் என்று அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன். திருமணத்திற்குப் பிறகு நடிகைகள் மறைந்துவிடுவார்கள் என்ற கருத்தை உடைக்க விரும்புகிறேன். ஆஷ்ரித் என்னை ஒருபோதும் நடிப்பை நிறுத்தச் சொல்ல மாட்டார் என்பது எனக்குத் தெரியும். உண்மையில், நான் ஆஷ்ரித்தை மணந்ததற்கான காரணம் அதுதான் ” என்றார்.