பப் சர்ச்சை…நடிகை கல்பிகா கணேஷ் மீது வழக்குப் பதிவு|Case filed against actress Kalpika Ganesh over Prism Pub row

ஐதராபாத்,
நடிகை கல்பிகா கணேஷ் மீது கச்சிபவுலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை கல்பிகா தனது நண்பருடன் பிறந்தநாளை கொண்டாட ஐதராபாத்தில் உள்ள ஒரு பப்பிற்குச் சென்றிருந்தபோது, பப் ஊழியர்களுக்கும் நடிகைக்கும் இடையே ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது நடிகை, பப் ஊழியர்களை மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும், ஓட்டல் சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
இதனையடுத்து, புகாரின் பேரில், நடிகை கல்பிகா கணேஷ் மீது கச்சிபவுலி போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகைக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பவும் வாய்ப்புள்ளது.
கல்பிகா கணேஷ் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘பிரயாணம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். ‘ஆரஞ்சு’, ‘ஜூலாய்’, ‘சீதம்மா வகிட்லோ ஸ்ரீரிமல்லே சீட்டு, ‘படி படி லெச்சே மனசு’, ‘ஹிட்: தி பர்ஸ்ட் கேஸ்’, ‘யசோதா’ உள்ளிட்ட பிரபலமான படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக அவர் 2023 ஆம் ஆண்டு வெளியான ‘அதர்வா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். படங்களைத் தவிர, கல்பிகா கணேஷ் ‘எக்கடிகி ஈ பருகு’ மற்றும் ‘லூசர்’ என்ற ஜீ5 வெப் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.