அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை – திரிஷா | My dream is to act with him

சென்னை,
அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘மவுனம் பேசியதே’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிஷா. இவரது நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மலையாளத்தில் ‘ஐடென்டிட்டி’, தமிழில் ‘விடாமுயற்சி’, சமீபத்தில் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
அதனை தொடர்ந்து திரிஷா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது. மேலும், ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் சூர்யா 45 படத்திலும் திரிஷா நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை திரிஷா பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், உங்களுக்கு எந்த நடிகருடன் இணைந்து நடிக்க ஆசை? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை திரிஷா, “சந்தேகமே வேண்டாம். பகத் பாசிலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அவர் எந்த மாதிரியான கதைகள் நடித்தாலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துவார்” என்று தெரிவித்துள்ளார்.