The child who was stunned after watching the movie “Maman”; Actor Soori made peace through video call

சென்னை,
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, ‘கருடன், கொட்டுக்காளி’ , ‘விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக வெற்றிகளைக் குவித்தது. கொட்டுக்காளி படம் சர்வதேச நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் வெற்றிகளைக் குவித்தது.
இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மாமன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ‘கருடன்’ திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள மாமன் படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான ஸ்ரீகுமரன் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
சூரியின் நடிப்பில் உருவான ‘மாமன்’ படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தை பார்த்த சிறுமி கண்ணீர்விட்டு அழுதுள்ளார். அப்போது அங்கிருந்த நடிகர் சூரியின் நண்பர் ஒருவர் சூரிக்கு வீடியோ கால் செய்து நடந்ததை கூறியுள்ளார். உடனே அந்த சிறுமிக்கு வீடியோ கால் மூலமாகவே சூரி ஆறுதல் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை எக்ஸ்தளத்தில் வெளியிட்ட சூரி, அந்த பாப்பாவின் தாய்மாமாவுக்கு, இந்த படத்தின் வாயிலாக என் அன்பும், மனமார்ந்த வாழ்த்துகளும் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “இது எனக்கு ஒரு ஸ்பெஷல் ரிவ்யூ ‘மாமன்’ படம் பார்த்த பிறகு, இந்த பாப்பா தன்னுடைய தாய்மாமாவை ரொம்பவே மிஸ் பண்ணுறா…இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தருணம் கிடைத்தது என்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. தன்னுடைய அன்பான மாமாவை மனதில் வைத்து நினைத்து வருகிற இந்த பாப்பாவின் தாய்மாமாவுக்கு, இந்த படத்தின் வாயிலாக என் அன்பும், மனமார்ந்த வாழ்த்துகளும்” என சூரி கூறினார்.






