பீஷ்மர் (மலையாளம்): திரை விமர்சனம்

ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் இயக்கத்தில் தியான் ஸ்ரீனிவாசன், திவ்யா பிள்ளை நடிப்பில் வெளியாகியுள்ள ‘பீஷ்மர்’ மலையாள திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.
கதைக்களம்
கேரளாவின் கொழிஞ்சம்பாறையில் காய்கறி விநியோகம் செய்து வரும் முருகன் (தியான் ஸ்ரீனிவாசன்), தினமும் தனக்கு எதிர்வீட்டில் குடியிருக்கும் கௌரி (திவ்யா பிள்ளை) போலீஸ் கணவரிடம் அடிவாங்குவதைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார்.
கௌரி திருமணத்திற்கு முன் முருகனை காதலித்திருக்கிறார். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ளலாம் என்று முயற்சிக்க, முருகன் குறித்த நேரத்திற்கு வராததால் கௌரியை அவரது பெற்றோர் கண்டுபிடித்து போலீஸாக இருக்கும் செந்தில் கிருஷ்ணாவுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
இவர்கள் வாழ்க்கை இப்படி இருக்க, ஒருநாள் இரவில் தற்கொலைக்கு முயலும் அரவிந்த் (விஷ்ணு உன்னிகிருஷ்ணன்) என்ற இளைஞரை முருகன் காப்பாற்றுகிறார்.
விடிந்தால் தனது இஸ்லாமிய காதலிக்கு திருமணம்; ஆனால் அவள் நான் வரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வாள் என்று கூறி அரவிந்த் அழுகிறார்.
பின் அவர்களது காதல் கதையை கேட்கும் முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள், பெண்ணை கூட்டிவந்து அரவிந்துடன் சேர்த்து வைக்க முடிவெடுக்கின்றனர்.
அதே சமயம் கணவரால் தினமும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் கௌரி, அதே இரவில் அவரை தாக்கிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறுகிறார்.
அதன் பின்னர் அரவிந்த்தின் காதலை முருகன் சேர்த்து வைத்தாரா? கௌரியின் நிலை என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
தமிழில் நாடோடிகள் படத்தைப் போல தற்கொலைக்கு முயலும் ஒருவனின் காதலியை, ஹீரோ தூக்கிவந்து திருமணம் செய்து வைப்பது என கதை ஆரம்பிக்கிறது.
ஆனால் போக போக அதில் சில கதாபாத்திரங்கள் உள்ளே வர, கதை வேறு தளத்திற்கு நகர்ந்து சுவாரஸ்யப்படுத்தும் வகையில் இயக்கியுள்ளார் ஈஸ்ட் கோஸ்ட் விஜயன்.
மெதுவாக ஆரம்பிக்கும் கதை கல்யாண வீட்டில் பெண்ணை தூக்கிய பின் காமெடி, த்ரில்லர் ஜானரில் வேகமெடுக்கிறது.
முதல் பாதி தொய்வில்லாமல் நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில்தான் காமெடி அட்ராசிட்டி செய்திருக்கிறார் இயக்குநர்.
யாரோ ஒருவரின் காதலை சேர்த்து வைக்க களத்தில் இறங்கி மாட்டிக்கொண்டு முழிக்கும் தியான், அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அலையவிடும் விஷ்ணு, இதற்கிடையில் எனக்கு திருமணம் ஆகும்தானே என்று வெகுளியாய் கேட்கும் பிஜு என படத்தில் ஒவ்வொரும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
பிளாஷ்பேக்கில் அர்ஜுன் ரெட்டி போல உன்னி லாலு மிரட்ட, அழகு பெண்ணாக வந்து கவர்கிறார் அம்மைரா கோஸ்வாமி.
போலீஸ் அதிகாரியாக வரும் செந்தில் கிருஷ்ணா தனது உடல்மொழியிலேயே பயமுறுத்த, இந்திரன்ஸ் கிளைமேக்சில் வந்து காமெடி கலந்து கருத்து சொல்கிறார்.
ஒரு பெரிய டான் ரேஞ்சில் இருக்கும் நபர், ஒரு சூழலில் பெண் குரலில் செல்போனில் பேசி முத்தம் கொடுக்கும் காட்சி எல்லாம் அல்டிமேட் காமெடி.
நன்றாக சென்றுகொண்டிருந்த திரைக்கதையில் சட்டென கிளைமேக்ஸ் ஜம்ப் ஆவது சற்று நெருடல்.
ஆனாலும் சுபம் போட்டு முடித்திருக்கிறார் இயக்குநர்.
ஜான் குட்டியின் எடிட்டிங் கச்சிதம்; ரஞ்சின் ராஜ், கே.ஏ.லத்தீப்பின் இசை சிறப்பு மற்றும் ரதீஷ் ராமின் ஒளிப்பதிவு அருமை.
க்ளாப்ஸ்
திரைக்கதை
ட்விஸ்ட்
காமெடி காட்சிகள்
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை






