ஜீவா மீது மலரும் காதல்.. காதல் பயணத்தை நோக்கி நகரும் மீனாட்சி! வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. தினந்தோறும் விறுவிறுப்பான திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இந்த சீரியலில், நேற்றைய எபிசோடில் சிவா மற்றும் மீனாட்சி கல்லூரிக்கு வந்திருந்த நிலையில், இன்று பல சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேற உள்ளன.
கல்லூரிக்குச் சென்ற மீனாட்சி மற்றும் சிவா, அங்கு பேராசிரியராக பணியாற்றி வரும் ஜீவாவின் நெருங்கிய நண்பரை சந்திக்கின்றனர். அப்போது, “இவனுடன் நண்பராக இருந்த நீங்கள் எப்படி இவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறீர்கள்?” என்று மீனாட்சி ஜாலியாக கேட்க, ஜீவா அவரது வாழ்க்கையில் செய்த உதவிகள் குறித்து பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியின் கல்விக் கட்டணத்தையும் ஜீவாவே ரகசியமாக செலுத்தியிருப்பது தெரிய வருகிறது. அதுமட்டுமல்லாமல், “ஜீவா அண்ணா பல பேருக்கு உதவி செய்திருக்கிறார்… ஆனால் அதைப் பற்றி அவர் ஒருபோதும் வெளியே சொல்ல மாட்டார்” என்று அந்த மாணவி கூற, மீனாட்சியின் மனதில் ஜீவாவைப் பற்றிய பார்வை முற்றிலும் மாறுகிறது.
வீட்டில் அனைவராலும் “வெட்டிப் பையன்” என்று தவறாக புரிந்துகொள்ளப்படும் ஜீவா, உண்மையில் எத்தனை பேரின் வாழ்க்கையில் ஒளியாக இருக்கிறார் என்பதை அறிந்த மீனாட்சி, அவர்மீது தனி மரியாதையும் ஈர்ப்பும் கொள்ள தொடங்குகிறாள். இந்த நட்பு காதலாக மலரப் போகிறதா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரிக்கிறது.
மறுபக்கம், வீட்டில் பணத்தை மாற்றி வைத்த மர்ம நபரை கண்டுபிடிக்க அப்பத்தா உறுதியான முடிவெடுக்கிறார். தேவியுடன் சேர்ந்து அவர் ஒரு அதிரடி திட்டத்தை செயல்படுத்துகிறார். வீட்டின் வாசலில் சூடத்தை ஏற்றி வைத்து, “நான் பணத்தை எடுக்கவில்லை” என்று ஒவ்வொருவரும் சத்தியம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்.
இந்த எதிர்பாராத சோதனையில் உண்மை வெளிவருமா? குற்றவாளி சிக்குவாரா? ஜீவா – மீனாட்சி உறவு அடுத்த கட்டத்தை எட்டுமா?
பரபரப்பும், உணர்வுகளும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த இந்த எபிசோடை தவறாமல் இன்று இரவு 9:30 மணிக்கு உங்கள் Zee தமிழில் காணுங்கள்!






