‘Whenever he and I work together, we get a National Award’ – Mohanlal|’அவரும் நானும் சேர்ந்து பணியாற்றும்போதெல்லாம் தேசிய விருது கிடைக்கும்’

சென்னை,
நடிகர் மோகன்லால் தற்போது இயக்கி நடித்திருக்கும் படம் பரோஸ். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இந்த படத்தில் இவருடன் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பில் 3டி-யில் உருவாகியுள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சந்தோஷ் சிவனுடன் இப்படத்தில் பணியாற்றியது குறித்து மோகன்லால் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
‘சந்தோஷ், நான் உள்பட இப்படக்குழு அனைவருக்கும் பரோஸ் ஒரு புதிய அனுபவம். நானும் சந்தோஷும் சேர்ந்து பணியாற்றும்போதெல்லாம் அவருக்கு தேசிய விருது கிடைக்கும். அவரால் மட்டுமே அந்த மாதிரியான நம்பிக்கையை கொடுக்க முடியும். அந்த அளவிற்கு படத்திற்கு அவர் அர்ப்பணிப்பையும், அன்பையும் கொடுக்கிறார்’ என்றார்.
மோகன்லால் நடிப்பில் வெளியான கலாபானி, இருவர், வானபிரஸ்தம் போன்ற படங்களுக்கு சந்தோஷ் சிவன் தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த 3 படங்களுக்காகவும் அவருக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.






