Sasikumar introduced the most directors in Tamil cinema – Director Muthiah | தமிழ் சினிமாவில் அதிக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் சசிகுமார்

சென்னை,
தமிழ் சினிமாவில் ‘குட்டிப்புலி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் முத்தையா. ‘குட்டிப்புலி’ படத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாகவும் லட்சுமி மேனன் நாயகியாகவும் நடித்திருந்தனர். 2013ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது. பின்னர் இவர், கொம்பன், மருது, கொடிவீரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், முத்தையா மீது சாதிய படங்களை இயக்கி வருவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய முத்தையா, “என்னை இயக்குநரென முதலில் நம்பியவர் சசிகுமார். ‘குட்டிப்புலி’ கதையை நடித்துக்காட்டியபடியே சொன்னேன். சிலருக்கு நம்பிக்கையில்லை என்றாலும், ‘சினிமா என்பது நடிப்புதான். முத்தையாவுக்கு அதைச் சொல்ல வருகிறது’ என சசிகுமார் சொன்னார். என் அப்பா, அம்மாவுக்குப் பின் என்னை முழுமையாக நம்பியது அவர்தான்.மேலும், என்னிடம் பேசும்போது சினிமாவில் நான் தனிப்பட்ட சாதனை என நினைப்பது 10 இயக்குநர்களையாவது என் மூலம் அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்றார். இதுவரை 11 பேரை தன் நடிப்பில் இயக்குநராக அறிமுகப்படுத்திவிட்டார். தமிழ் சினிமாவுக்கு நிறைய சசிகுமார்கள் தேவை.” என்றார்.குட்டிப்புலி திரைப்படத்திற்குப் பின் சசிகுமாருடன் இணைந்து கொடிவீரன் படத்தை முத்தையா இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது






