Respect everyone beyond politics – Soori’s advice to Vijay | அரசியலை தாண்டி அனைவரையும் மதிக்க வேண்டும்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று நடிகர் சூரி தனது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தார். கோவிலை விட்டு வெளியே வந்த அவரை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து செல்பி எடுத்தனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் “ இன்று எனக்கும், என் தம்பிக்கும் பிறந்தநாள். ராமன், லட்சுமணனாக நானும் என் தம்பியும் இரட்டை பிறவிகள். ராமன் என்ற பெயர் சூரியாக மாறியிருக்கிறது. அம்மன் உணவகம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அதற்கு காரணம் சூரி என்று சொல்வார்கள். ஆனால், அம்மன் உணவகம் வளர்ச்சிக்கு எனது தம்பிகள், அண்ணன்கள் தான் முழு காரணம். ‘மண்டாடி’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு எப்படியோ அதேபோல் கடலில் போட் ரேசிங். கடலில் வீர விளையாட்டான மண்டாடி படம் வரும்போது நிறைய விஷயம் தெரிய வரும்” என்று தெரிவித்தார்.
திரைப்படத்தில் காமெடி நடிகர்கள் குறைந்து வருகிறார்கள் குறித்த கேள்விக்கு, “திரையில் காமெடிகள் நல்லா போய்க் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து எல்லாரும் வர வேண்டும், அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனக்கு வாய்ப்பு கொடுத்ததால் நல்லா வந்திருக்கேன் அதேபோல் அனைவருக்கும் வாய்ப்பு கொடுங்கள்” என்றார்.
மதுரை மாநாட்டில் விஜய் முதல்வரை விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு, “இதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் எல்லாருக்கும் எல்லோரும் வேண்டும். நல்லவிதமாக அரசியலில் அனைத்தையும் தாண்டி எல்லோரும் எல்லோரையும் மதிக்க வேண்டும். இன்னைக்கு விஜய் நடிப்பில் இருந்து ஒதுங்கி அரசியல் போயிருக்கார். அடுத்து திருப்பி வரலாம். அனைவருக்கும் விஜய் பிடிக்கும், எனக்கும் அவரை பிடிக்கும், என்னையும் அவருக்கு பிடிக்கும். அவர் அரசியலுக்கு சென்றது அவரது விருப்பம்” என்று தெரிவித்தார்.






