Producers of ‘Pushpa-2’ donate Rs 50 lakh to family of stampede victim | ‘புஷ்பா 2’ கூட்ட நெரிசலில் உயிரிழந்த விவகாரம்

ஐதராபாத்,
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படம் கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. நடிகர் அல்லு அர்ஜுன் படத்தை பார்க்க சென்றார். அவருடன் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா தியேட்டருக்கு வந்தனர்.
இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, குடும்பத்துடன் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜா (வயது 9) ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு நாள் இரவு முழுவதும் அவர் சிறையில் இருந்தார். பின்னர் ஐதராபாத் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து விடுதலை செய்யப்பட்டார்.
அல்லு அர்ஜுன் பாதிக்கப்பட்ட ரேவதியின் குடும்பத்தினருக்கு தன்னுடைய சார்பில் ரூ. 25 லட்சம் வழங்குவதாகவும் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் உடல்நலம் குறித்து நடிகர் அல்லு அர்ஜுன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டார். மருத்துவ சிகிச்சையில் இருக்கும் சிறுவன் குடும்பத்தினரை விரைவில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ‘புஷ்பா 2’ பட தயாரிப்பாளர், கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.