Plane crash: The pilot who died was my friend – “12th Bail” actor | விமான விபத்து: பலியான விமானி என் நண்பர்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ராந்த் மாஸ்ஸி. கடந்த 2017ல் வெளியான ‘எ டெத் இன் தி கஞ்ச்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், அதன்பின்னர் வெளியான, ‘ஜின்னி வெட்ஸ் சன்னி’, ‘ஹசீன் தில்ருபா’, ‘லவ் ஹாஸ்டல்’, 12-த் பெயில் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
விது சோப்ரா இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி வெளியான திரைப்படம் ’12-த் பெயில்’. இந்தி, தமிழ், தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், ஆனந்த் வி ஜோஷி, அன்சுமான் புஷ்கர் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் மனோஜ்குமார் ஷர்மா ஐபிஎஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி ஸ்ரத்தா ஜோஷி ஐஆர்எஸ்ஸின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது.
சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான படம் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’. கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்தப் படம், பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பாராட்டுகளை பெற்றது.
குஜராத் மாநிலம் அகமாதாபாத்தில் எதிர்பாராத விதமாக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் பலியாகியிருக்கின்றனர். அதில் ஒருவர் “12-த் பெயில்” திரைப்படத்தின் நாயகன் விக்ராந்த் மாஸ்ஸியின் நண்பர் விமானி கிளைவ் குந்தர்.
விமானியாகப் பணியாற்றிய அவரின் மரணம் குறித்து விக்ராந்த் மாஸ்ஸி தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில், “அகமதாபாத்தில் நடந்த கற்பனை செய்ய முடியாத துயரமான விமான விபத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்காக என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.என் மாமா கிளிபோர்ட் குந்தர் தனது மகன் கிளைவ் குந்தரை இழந்தார் என்பதை அறிந்து இன்னும் வேதனையாக இருக்கிறது. அவர் அந்த துரதிர்ஷ்டவசமான விமானத்தை இயக்கிய அதிகாரி. கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், மாமாவிற்கும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பலம் அளிக்கட்டும்” என தெரிவித்திருக்கிறார்.
இந்த கொடூரமான சம்பவத்திற்கு ஷாருக்கான், அக்சய் குமார், ஆலியா பட், கங்கனா ரனாவத், கரீனா கபூர் மற்றும் ரன்வீர் சிங் போன்ற பல பாலிவுட் பிரபலங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.