“Kantara 2” film promotional event has been cancelled

சென்னை,
கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா சாப்டர் 1’ என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார். இதில் நடிகை ருக்மனி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
‘காந்தாரா – சாப்டர் 1’ படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. பழங்குடியினருக்கும் மன்னருக்குமான நிலவுரிமை பிரச்னைகளைத் தொட்டு கதை உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. காட்சியமைப்புகளும் இசையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் பான் இந்திய மொழிகளில் வெளியாகும் ‘காந்தாரா – சாப்டர் 1’ மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
‘காந்தாரா – சாப்டர் 1’ திரைப்படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகள் பல மாநிலங்களிலும் துவங்கியுள்ளன. இந்தியளவில் அதிவேகமாக டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து வருவதால் இப்படம் வணிக சாதனையைச் செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் நாளை நடைபெற இருந்த ‘காந்தாரா சாப்டர்-1’ பட புரமோஷன் நிகழ்ச்சியை படக்குழு ரத்து செய்துள்ளது. கரூர் துயரச் சம்பவத்தை அடுத்து ‘காந்தாரா சாப்டர்-1’ பட புரமோஷன் நிகழ்ச்சி ரத்து செய்துள்ளது. கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. உரிய நேரத்தில் தமிழ்நாட்டு ரசிகர்களை சந்திப்போம் என ‘காந்தாரா’ படக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.