Kamal-Rajini alliance film Update | கமல்

சென்னை,
உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம் தயாரிக்க உள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் சுந்தர்.சி ரஜினியின் படத்தினை இயக்குவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்மையில் சுந்தர் சி ரஜினியின் படத்தை இயக்குவதில் இருந்து விலகி விட்டார். சுந்தர் சி விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், அவர் தற்போது ‘மூக்குத்தி அம்மன்-2′ படத்தை இயக்குவதில் பிசியாக இருக்கிறார்.
இதற்கிடையில் ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவது யார்? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் கே.எஸ்.ரவிகுமார், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோரின் பெயர் அடிபடுகிறது.
கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, நான்தான் தயாரிப்பாளர் என்னுடைய நட்சத்திரத்திற்கு (ரஜினிகாந்த்) பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது. அவருக்குப் பிடிக்கிற வரை கதை கேட்டுக் கொண்டே இருப்போம். ரஜினியின் படத்தை இயக்க புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு உள்ளது. கதை நன்றாக இருக்க வேண்டும் அவ்வளவுதான் என்றார். மேலும் நானும் ரஜினியும் இணைந்து நடிப்பதற்கு இன்னொரு கதையை தேடிக்கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என ராஜ் கமல் பிலிம்ஸ் அறிவித்துள்ளது.






