I will definitely make my fans proud one day – Ajith Kumar | என் ரசிகர்களை நிச்சயம் ஒருநாள் பெருமைப்படுத்துவேன்

நடிகர் அஜித்குமார், ‘குட்பேட் அக்லி’ படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். இப்படம் பற்றிய அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். கடந்த ஆண்டு, அபுதாபி, பார்சிலோனா, மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் நடந்த கார் பந்தய போட்டிகளில் தனது ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியினருடன் கலந்து கொண்ட அவர் இப்போது, 24 ஹெச் சீரிஸ்- மத்திய கிழக்கு டிராபிக்கான பந்தயத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.
துபாயில் அவரை திரை பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர். அனிருத் அஜித்தை சமீபத்தில் சந்தித்திருந்தார். இவரைத் தொடர்ந்து சிபிராஜ் , விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி, ஜிவி பிரகாஷ் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
அஜித் அணியின் கார் போட்டியின்போது விபத்துக்குள்ளானது. போட்டியில் பங்கேற்ற கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் காரை ஓட்டிச் சென்ற வீரர் அயர்டன் ரெடான்ட் உடனடியாக காரை நிறுத்தி வெளியே ஓடினார். பின்பு தீயணைப்பு உபகரணங்கள் வைத்து காரின் தீ அணைக்கப்பட்டது. முன்னதாக இதே போன்று அஜித் அணியின் கார்கள் அடிக்கடி விபத்துகளை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், “எனக்கு ஆதரவு கொடுக்க திரண்டு வந்த ரசிகர்கள், நான் ரேஸ் ஓட்டுவதை, எங்கள் அணி பரிசு வெல்வதை பார்க்க முடியாதது வருத்தமாக இருக்கிறது. என் ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன். நல்ல காலம் காத்திருக்கிறது. எங்கள் அணி நிச்சயம் ஒருநாள் அவர்களை பெருமைப்படுத்தும்” என்று அஜித்குமார் கூறியுள்ளார்.






