I am disappointed that “Aadujeevitha” and “Ayodhi” did not win the National Award – Vairamuthu | “ஆடுஜீவிதம்”, “அயோத்தி” படங்கள் தேசிய விருது பெறாதது எனக்கு ஏமாற்றம்தான்

சென்னை,
1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.கவிஞர் வைரமுத்து ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ புத்தகம் ஜூலை 13ம் தேதி வெளியானது.
71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. 2022-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.2023-ம் ஆண்டு திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்று அளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கான தேர்வில் பங்கேற்றன. சிறந்த திரைப்படமாக ’12த் பெயில்’ தேர்வு செய்யப்பட்டு இதில் நடித்த விக்ராந்த் மாசிக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. அட்லி இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான ‘ஜவான்’ படத்தில் நடித்த ஷாருக்கானுக்கும் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.
நடிகர் சசிகுமார் நடிப்பில் 2023-இல் வெளியான அயோத்தி படம் ஒரு தேசிய விருதுகூட பெறாதது தமிழ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில், உத்திரப் பிரதேசத்தின் அயோத்தியில் வசிக்கும் குடும்பத்தினர் ராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா வருவார்கள். தமிழ்நாட்டில் நடந்த விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழக்க, அவரது உடலை அவர்களது சொந்த ஊருக்குக் கொண்டுசெல்ல சசிகுமார் உதவுவார். .இந்தப் படம் மத நல்லிணக்கத்துக்கு மட்டுமில்லாமல் மனிதம் பற்றி பேசிய முக்கியமான படமாகவும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.
மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவல் (தி கோட் லைப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் நாயகனாக பிருத்விராஜும், நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர். பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.
இதுகுறித்து வைரமுத்து தனது எக்ஸ் பதிவில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-
தேசியத் திரைப்பட
விருதுகள் சிலவெனினும்
பெற்றவரைக்கும் பெருமைதான்
விருதுகளை வென்ற
கலைக் கண்மணிகள்
இயக்குநர்
ராம்குமார் பாலகிருஷ்ணன்,
தயாரிப்பாளர்கள்
சுதன் சுந்தரம் – கே.எஸ்.சினிஷ்,
சகோதரர் எம்.எஸ்.பாஸ்கர்,
தம்பி ஜி.வி.பிரகாஷ்,
நடிகை ஊர்வசி,
சரவண மருது,
சவுந்தரபாண்டியன்,
மீனாட்சி சோமன்
ஆகிய அனைவர்மீதும்
என் தூரத்துப் பூக்களைத்
தூவி மகிழ்கிறேன்
இந்த மிக்க புகழைத்
தக்கவைத்துக் கொள்வதற்கு
மேலும் உழைப்பதற்கு
இந்த விருதுகள்
ஊக்கமும் பொறுப்பும்
தருமென்று
உறுதியாய் நம்புகிறேன்
ஆயிரம் சொல்லுங்கள்
ஆடுஜீவிதம், அயோத்தி
விருதுபெறாதது
எனக்கு ஏமாற்றம்தான்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.