Happy that the Coimbatore flyover has been named after G.D. Naidu – Actor Sathyaraj | கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சி

கோவையில் அவினாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10 கிலோமீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மூன்றாவது பெரிய தரைவழிப்பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த மேம்பால கட்டுமானம் ப்ரீகாஸ்ட் முறையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில், “இப்போது நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன். சொந்த ஊரில் இருப்பது பெரிய விஷயமா? என்று கேட்பீர்கள். நான் ஒரு படப்பிடிப்பிற்காக கோயம்புத்தூருக்கு வந்திருக்கிறேன். அந்தப் படத்தின் பெயர் ஜி.டி நாயுடு. தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்த மாதிரி ஜி.டி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக எடுக்கிறோம். இதில் ஜி.டி நாயுடுவாக என்னுடைய அன்பு நண்பர் மாதவன் நடிக்கிறார். கிருஷ்ணா இயக்குகிறார். வர்கீஸ் தயாரிக்கிறார்.
நான் ராமையா பிள்ளை என்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்போது கோயம்புத்தூரில் ஜி.டி நாயுடு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிற இதே நேரத்தில் ஒரு மிகப்பெரிய மேம்பாலத்திற்கு நம் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஜி.டி நாயுடு அவர்களின் பெயரைச் சூட்டி மகிழ்கிறார். ஒரு கோயம்புத்தூர்க்காரன் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன். எங்கள் படக்குழுவின் சார்பில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜி.டி நாயுடு குடும்பத்தாருக்கும் எங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று பேசியுள்ளார்.