Director Selvaraghavan praises for the song “MUTHA MAZHAI”

சென்னை,
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. கர்நாடகாவில் மட்டும் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இப்படம் வெளியாகவில்லை. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தக் லைப் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. மூன்று நாட்களில் ‘தக் லைப்’ படம் தமிழ் நாட்டில் மட்டும் ரூ. 26 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்கிடையில், தக் லைப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய ‘முத்தமழை’ பாடல் ரசிகர்களை வெகுவா கவர்ந்துள்ளது. சின்மயி பாடிய ‘முத்தமழை’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ‘தக் லைப்’ ஆல்பத்தில் 10-வது பாடலாக சின்மயி வெர்ஷன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தை பார்த்த இயக்குநர் செல்வராகவன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பாராட்டியுள்ளார். “ஒரு பாடல் கேட்டு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போய் – உயிரில் மின்சாரம் பாய்ந்து கேட்டது முதல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதெல்லாம் உலகில் ஒரே மனிதனால் – நம் ஏ.ஆர்.ரகுமான் அவர்களால் மட்டுமே முடியும்.” என புகழ்ந்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.






