Actor Vadivelu demands action against defamatory YouTubers on behalf of Nadigar Sangam | அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது நடிகர் சங்கத்தின் சார்பில் நடவடிக்கை தேவை

சென்னை,
69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் ராஜேஷ், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட 70 நட்சத்திரங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் தேசிய விருது பெற உள்ள ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், ஜிவி பிரகாஷ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
நடிகர் வடிவேலு பேசுகையில், “நமக்குள் ஒற்றுமை வேண்டும். பெரிய கலைஞர்கள், சின்ன கலைஞர்கள் என்று பார்க்காமல் யூடியூப் ஒன்றை வைத்துக் கொண்டு நம் கலைஞர்களைத் தவறாகப் பேசி, சிறிதளவு விஷயத்தை பெரிதளவு ஊதிப் பெரிதாக்கி விடுகிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. இன்னும் நிறைய யூடியூபர்ஸ் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சீக்கிரமாக நடிகர் சங்கத்தின் சார்பில் ஆப்பு வைக்க வேண்டும். இந்தப் படத்தைப் பற்றி பேசு, அந்தப் படத்தைப் பற்றி பேசு என்று தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் சிலரின் இதை செய்கின்றார்கள். இதற்கு நடிகர் சங்கத்திலும் சிலர் உடந்தையாக இருக்கின்றார்கள்.
இதனை நடிகர் சங்கத்தில் யாரும் கண்டிப்பதில்லை. இப்படிப் பேசி வருபவர்களைப் போர்க்கால அடிப்படையில் உண்டு இல்லாமல் ஆக்க வேண்டும். நடிகர் சங்கம் என்பது நடிகர்களைப் பாதுகாப்பது தான். திரைக்கு வெளியிலும் விட்டு வைக்காமல் படம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது விமர்சனம் எடுக்கிறார்கள். சினிமாவை 10 பேர் சேர்ந்து அழித்து வருகிறார்கள்.ரோபோ சங்கர் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்று நான் ஊரில் இல்லை. ஒரு நாள் வீட்டுக்குச் சென்று பார்த்து வருவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.