Actor SV Sekar sentenced to one month in prison – Madras High Court orders| நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை

சென்னை,
நடிகரும் பா.ஜ.க. நிர்வாகியுமான எஸ்.வி. சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை கொண்ட பதிவை தனது முகநூல் பக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் பகிா்ந்திருந்தாா். இதுகுறித்து பத்திரிகையாளா் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பல சட்டப்பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் எஸ். வி.சேகர் மனு தாக்கல் செய்தார். அப்போது பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரமும் தாக்கல் செய்தார். ஆனால் எஸ்.வி.சேகர் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பில் எஸ்.வி .சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை எம். எல். ஏ., எம்.பி. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு ஆறு மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை சிறப்பு கோர்ட்டு, அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டிருந்தது. அபராதத் தொகையை செலுத்திய பிறகு தண்டனையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக எஸ்.வி.சேகா் தரப்பில் மனு தாக்கல் செய்ததை ஏற்று, தண்டனையை நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நடிகர் எஸ்.வி. சேகருக்கு அளிக்கப்பட்ட ஒரு மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது