Actor Prithviraj’s new movie title announcement

தமிழ், மலையாள சினிமாவில் பிரபல நடிகரான பிருத்விராஜ் மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல படங்களைக் கொடுத்ததுடன் லூசிபர், ப்ரோ டாடி, எம்புரான் ஆகிய திரைப்படங்களை இயக்கி இயக்குநராக அங்கீகாரம் பெற்றார்.குறிப்பாக, மலையாள சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான எம்புரான் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. அண்மையில், இவர் நடிப்பில் வெளியான இந்திப் படமான சர்சாமின் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
நடிகர் மோகன்லாலின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த, துடரும் திரைப்படத்தை இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கியிருந்தார். இந்தப் படம், ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றியடைந்தது. நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் – இயக்குநர் தருண் மூர்த்தி ஆகியோரது கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு ‘ஆபரேஷன் கம்போடியா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் தருண் மூர்த்தியின் முதல் திரைப்படமான, ஆபரேஷன் ஜாவாவின் இரண்டாவது பாகம் ஆபரேஷன் கம்போடியா எனும் பெயரில் உருவாகின்றது. இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய்யின் இசையில் உருவாகும் இப்படத்தில், நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாறன், லுக்மான் அவாரன், பாலு வர்கீஸ், இர்ஷாத் அலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
முன்னதாக, 2021ம் ஆண்டு வெளியான ஆபரேஷன் ஜாவா திரைப்படம், கேரளத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருந்தது. இதனால், அதன் 2ம் பாகமான ஆபரேஷன் கம்போடியா திரைப்படமும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.