50வது நாளை நிறைவு செய்த 'புஷ்பா 2'

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் உருவாகியுள்ளது. கடந்த 5-ந் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் இப்படம் 6 நாட்களில் ரூ.1002 கோடி வசூலை கடந்தது. இந்திய அளவில் அதிவேகமாக இந்த சாதனையை எட்டியுள்ள படம் என்ற பெருமையும் ‘புஷ்பா 2’ படத்திற்கு கிடைத்துள்ளது. 32 நாட்களில் இப்படம் ரூ.1831 கோடி வசூல் செய்துள்ளது.
தற்போது 50வது நாளை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. 1900 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்குத் திரையுலகத்தில் ‘பாகுபலி 2’படத்திற்குப் பிறகு அதிக வசூலைக் குவித்த படமாக ‘புஷ்பா 2’ உள்ளது.
கடந்த 50 நாட்களில் தெலுங்கில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் ‘புஷ்பா 2’ படத்திற்கான வரவேற்பு குறையாமல் இருந்தது. தெலுங்கு நடிகர்களில் பிரபாஸுக்கு அடுத்து அதிக வசூலைக் குவித்த நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அல்லு அர்ஜுன். இந்த வசூல் சாதனையை ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோரும் பெற முடியவில்லை.