வெங்கட் பிரபு "அஜித்துக்கு எழுதிய டயலாக்" போலவே, நாகார்ஜுனா கேரக்டர் – `கூலி' விழாவில் ரஜினிகாந்த்

சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர்கான், சோபின் சாஹிர், சுருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
வருகிற 14-ந்தேதி உலகம் முழுவதும் ‘கூலி’ படம் திரைக்கு வருகிறது. இதற்கிடையில் ‘கூலி’ படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று இரவு நடந்தது.
விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “‘கைதி’ படத்தை பார்த்து லோகேஷ் கனகராஜூக்கு நான் போன் செய்து, ‘மற்றவர்கள் வந்து முந்துவதற்கு முன்பாக நீங்கள் என்னிடம் வாங்க’ என்று கூறினேன். வந்தவரிடம் ‘எனக்கு ஏதாவது கதை வைத்தீர்களா?’ என்று கேட்டேன் உங்களுக்கு இல்லாத கதையா. இருக்கு ஆனால் நான் கமல் ரசிகன் சார் என்றார்.
அதாவது என்னிடம் சூசகமாக சொல்கிறாராம்… பஞ்ச் டயலாக் அப்படி எல்லாம் இருக்காது இன்டெலிஜெண்டா நடிக்கணும் அப்படின்னு என்னிடம் நாசுக்காக சொல்கிறாராம். அதற்குள் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை எடுத்து முடித்து விட்டார். இந்த தடவை விடுவதாக இல்லை என்னிடம் கதை சொல்ல வந்தார். பக்கா வில்லன் கேரக்டர் என்றார் உடனடியாக ஓகே சொல்லி விட்டேன். ‘தேவா’ என்று பெயர் வைக்கப்பட்டது. பின்னர் திடீரென கதையை மாற்றி ‘கூலி’ என்றார். டபுள் ஓகே என்றேன்.
அஜித் ‘டயலாக்’
இந்த படத்தில் சத்யராஜினை நடிக்க தேர்வு செய்த போது, ‘அவரிடம் நான் நடிக்கிறேன் என்று சொல்லி விட்டீர்களா…’ என்று கேட்க சொன்னேன். கருத்து ரீதியாக சிந்தனை மாறுபட்டாலும் இருவருக்கும் ஒரு இணக்கம் இருக்கிறது, நட்பும் இருக்கிறது. மனதில் பட்டதை படபடவென பேசும் நபர்களை நம்பிவிடலாம் உள்ளே ஒன்று வைத்து வெளியே வேறு விதமாக கேட்பவர்களை தான் நம்ப கூடாது. அந்தவகையில் சத்யராஜியை நம்பலாம்.
நாகார்ஜூனா வில்லன் நடிகர் என்றார்கள். எப்படி என்று ஆச்சரியப்பட்டேன். ஏனெனில் தென் இந்திய சினிமாவில் பணக்கார நடிகர் அவர். எனவே பணம் கொடுத்து அவரை நிச்சயமாக படத்துக்குள் கொண்டு வர முடியாது. மங்காத்தா படத்தில் அஜித்குமாருக்கு வெங்கட் பிரபு ஒரு டயலாக் வைத்திருப்பார். ‘நானும் எத்தனை நாள் தான் நல்லவனாகவே நடிக்கிறது…’ என்று. அப்படித்தான் இந்த படத்துக்குள் நாகர்ஜுனா வந்தார்.
இன்றளவும் அவர் இளமையாக இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டு போனேன். என்னடா நாம் இப்படி இருக்கோம். இவர் எப்படி கலக்குறாரு என்று அவரிடமே அந்த ரகசியத்தை கேட்டேன். 45 ஆண்டுகால உடற்பயிற்சி, கடுமையான உணவு கட்டுப்பாட்டின் ரகசியம் தான் அது. கண்ணுங்களா இந்த உடலை நாம் தண்டிக்காமல் போனால் அந்த உடல் நம்மை தண்டித்து விடும்.
சுருதிகாசன், அமீர்கான்
சுருதிகாசனும் அட்டகாசமாக நடித்துள்ளார். நான் கமல்ஹாசனின் பொண்ணுடா என்று சொல்லும்படி அவர் நடிப்பு அமைந்திருக்கிறது. முக்கியமான நடிகர் ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக என்னிடம் சொன்னார் லோகேஷ் கனகராஜ். அடேயப்பா கமல்ஹாசனை பிடித்து விட்டார்கள் போலிருக்கே என்று ஆச்சரியப்பட்டு போனேன். கனவில் மிதந்தேன். அமீர்கான் என்ற போது நான் அதைவிட ஆச்சரியப்பட்டு போனேன். ஏனெனில் அவர் ஒரு கதையை ஓகே செய்யவே 2 ஆண்டு ஆகும். இங்கு கமல் எப்படியோ, வட இந்தியாவில் அமீர்கான் ஸ்டார்.
சாண்டி மாஸ்டர்
படத்தின் முதல் காட்சியை ஒரு பிணத்துக்கு மாலை போடுவது போல எடுத்தார்கள். வெலவெலத்து போனேன். இப்படி ஒரு படத்தை, இப்படி ஒரு இயக்குனரை நான் பார்த்ததே இல்லை. இந்த படத்தில் சாண்டி மாஸ்டர் தலைவா தூள் கிளப்பிடலாம் என்று சொல்லி என்கிட்ட வந்தார். நான் அவரிடம் அய்யா நான் 1950 மாடல். பல லட்சம் கிலோமீட்டர் வண்டி ஓடி இருக்கு ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் மாத்தி இருக்காங்க. ரொம்ப ஆடவச்சிடாதீங்க. ஸ்பேர் பார்ட்ஸ் கழண்டு விடும் என்று சொன்னேன்.
நான் கூலியாக இருந்த போது நடந்த ஒரு சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். என்னை சின்ன வயதில் படித்து ஆளாக வேண்டும் என்று என் அண்ணன் எவ்வளவோ கனவு கண்டார். கஷ்டப்பட்டு உழைத்து என்னை தனியார் கல்லூரியில் சேர்த்தார் நான் நிச்சயமாக படிக்க மாட்டேன் என்பது எனக்கே தெரியும். கல்லூரி தேர்வு கட்டணமாக என் அண்ணன் எனக்கு கொடுத்த ரூ.120 உடன் சென்னைக்கு ஓடி வந்தவன் நான். நடிகனாக இல்லை ஒரு லைட் மேன் ஆவது ஆகிவிட வேண்டும் என்பதுதான் என் கனவு. அந்த அளவு சினிமாவை ரசித்தவன் நான். ஆனால் எதுவும் நடக்கவில்லை மறுபடியும் வெறும் கையுடன் வீட்டுக்கு திரும்பினேன்.
யாரும் திட்டவில்லை. எனக்கு தெரிந்த இடத்தில் கூலிக்கு மூட்டை தூக்க செல்ல வேண்டும் என்று அப்பா சொன்னார். சரி என்று சென்றேன் 100 கிலோ கொண்ட ஒரு அரிசி மூட்டையை தூக்கி இறக்கினால் பத்து பைசா கூலி. எடை பார்த்து வாடிக்கையாளர்கள் கொண்டு சேர்த்து விட்டால் 50 பைசா கிடைக்கும். அருகில் உள்ள கடைகளுக்கு கொண்டு செல்லும் பட்சத்தில் 50 மூட்டைகளுக்கு ஐந்து ரூபாய் கூலி. இந்த பையன் சம்பாதிக்கட்டுமே என்று அங்கிருந்தவர்களும் எனக்கு உதவி செய்தார்கள். அங்கும் பலர் தமிழர்கள் தான்.
ஒரு தடவை பத்து ரூபாய் கூலிக்கு ஆசைப்பட்டு அருகில் உள்ள கடைக்கு அரிசி மூட்டையை கொண்டு சென்றேன். ஆனால் என் நேரம் அந்தப் பகுதியில் ஒரு விபத்து ஏற்பட்டு வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. நான் மூட்டை இழுத்து சென்ற வாகனமும் சரியில்லை. படாதபாடு பட்டு போனேன். அப்போது என்னுடன் சரோஜா என்ற பூக்கிரண்டு எனக்கு உதவி செய்து அந்த பத்து ரூபாய் கூலி கிடைக்க செய்தார்.
அடுத்த தடவை லோடு ஏற்றிச் செல்லும்போது கல்லூரியில் படித்த சக நண்பன் ஒருவனிடத்தில் சென்று விட்டேன். அவன் எனக்கு இரண்டு ரூபாய் டிப்ஸ் கொடுத்தான். என்ன ஆட்டம் ஆடினடா நீ.. ஆனால் இன்று.. என நக்கல் செய்தான். வாழ்க்கையில் முதல்முறையாக அப்படியே உட்கார்ந்து அழுதுவிட்டேன்.
எல்லோரும் உழைப்பு உழைப்பு உழைப்பு என்று என்னை பாராட்டுகிறார்கள் அதைவிட ஒரு ரகசியம் இருக்கிறது. இறைவன் எல்லோரிடமும் பேசுவான். என்ன செய்ய வேண்டும் என்பதை ரகசியமாக காதில் சொல்லுவான். எந்த மதமாக இருந்தாலும் அந்த குரல் கேட்கும். இதில் பிரச்சினை என்னவென்றால் அந்த குரலுடன் சேர்ந்து இன்னொரு குரலும் கேட்கும். அது உன்னுடைய குரல்.
நீயும் நல்லா இருக்க வேண்டும் மற்றவர்களும் நல்லா இருக்க வேண்டும் என்று இறைவனின் குரல் சொல்லும். யார் எப்படி போனால் நமக்கு என்ன நீ நல்லா இருக்க வேண்டும் என்று நமது குரல் சொல்லும். உன்னுடைய குரலை கேட்டால் பணம் பெயர் புகழ் என எல்லாமே தேடி வரும் ஆனால் எல்லாமே சில காலத்துக்கு தான். என்னதான் பணம் பெயர் புகழ் என எல்லாம் இருந்தாலும் வீட்டுக்குள் நிம்மதி வெளியே கவுரவம் இல்லாவிட்டால் எந்த பிரயோஜனமும் இல்லை.
நான் முடிந்த அளவு இறைவனின் குரலைக் கேட்டு நடந்து கொண்டிருக்கிறேன். அதனால் நானும் நன்றாக இருக்கிறேன் என்னை சார்ந்தவர்களும் நன்றாக இருக்கிறார்கள். என் கஷ்டத்தில் துணை நின்ற உங்களுக்கும், இந்த கெட்ட பையனை கல்யாணம் செஞ்சுக்கிட்டு படாத பாடு தட்டுவதும் என் மனைவிக்கும் என் அன்பான குழந்தைகளுக்கும் நன்றி என் பிள்ளைகளுக்கு ஒரு அப்பாவாக எனது கடமைகளை சரியாக செய்யவில்லை இருந்தாலும் அவருடைய காட்டும் அன்புக்கு நன்றி. இப்படி அனைவரது ஆசிர்வாதத்தாலும் நான் நன்றாக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.
இந்நிலையில் ‘கூலி’ படத்தின் டிரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கானோர் இதனை பார்த்து வரும்நிலையில், ரஜினி ரசிகர்களி இதனை டிரண்ட் செய்து வருகிறார்கள்.