‘வரலாற்று படத்தில் நடிக்க ஆசை’- நடிகை அதிதி ஷங்கர் | ‘Want to act in a historical film’

கார்த்தியுடன் ‘விருமன்’, சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ என அடுத்தடுத்து ‘ஹிட்’ படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவின் கவனிக்கப்படும் கதாநாயகியாக உருவெடுத்துள்ளார், அதிதி ஷங்கர். பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி, எம்.பி.பி.எஸ். படிப்பு முடித்தவர். சினிமா மீது கொண்ட ஆசையால் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். பாடகி, நடன கலைஞர், நடிகை என பன்முகம் கொண்ட அதிதி ஷங்கர், தமிழ் தாண்டி தெலுங்கிலும் கால் பதித்துள்ளார்.
அதிதி ஷங்கர் தனது சினிமா அனுபவம் குறித்து பகிர்ந்ததாவது:-
‘‘சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அப்பாவை (ஷங்கர்) பார்த்து எனக்குள்ளும் சினிமா ஆசை துளிர்விட்டது. என் பெற்றோரிடம் என் சினிமா ஆசையை சொன்னபோது, அதிர்ச்சியாகி போனார்கள். `முதலில் படி’ என்று சொல்லிவிட்டார்கள். சரியென்று எனக்கு பிடித்தபடி மருத்துவம் படித்தேன். எம்.பி.பி.எஸ். முடித்த கையுடன் அப்பாவிடம் சென்றேன்.
சினிமாவில் என்னால் சாதிக்க முடியவில்லை என்றால், மீண்டும் மருத்துவம் படிக்க வந்துவிடுகிறேன்’ என்றேன். `சரி’ என்றார். சினிமாவில் நுழைந்தேன். அடையாளம் பெற்றேன். பொத்தாம்பொதுவாக வாரிசு நடிகை என்று என்னை விமர்சிப்பவர்களை பற்றி நான் தவறாகவே நினைக்கவில்லை. விமர்சனங்கள் என்னை ஒருபோதும் பாதிக்காது. விமர்சனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவள் நான். ஏனெனில் என் அடையாளத்தை தாண்டி என் திறமையை அதிகம் நம்புகிறேன்.
எனக்கு ஒரு வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. விரைவில் அது நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டும், காத்துக்கொண்டும் இருக்கிறேன். ஒரு நடிகையாக எனக்கும், அப்பா டைரக்ஷனில் நடிக்க ஆசை. கார்த்தி, சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடி போட ஆசை. அதேபோல ராம்சரண், அல்லு அர்ஜுன் போன்றோருடன் தெலுங்கில் ஜோடி சேரவும் ஆசைப்படுகிறேன்.” என்று கூறியுள்ளார்.