ராமேசுவரம் கோவிலில் நடிகர் பிரபு தரிசனம்

ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று நடிகர் பிரபு தனது மனைவி புனிதாவுடன் வந்தார். அவர்கள் கோவிலில் விநாயகர், சாமி, அம்பாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
அவருடன் சிவாஜி மன்ற நிர்வாகிகள் தேவதாஸ், பால்ராஜ், சீனி, கவுன்சிலர் முகேஷ் குமார், கோவில் பேஷ்கார் கமலநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கோவிலுக்கு வந்த நடிகர் பிரபுவுடன் ஏராளமான பக்தர்கள், கோவில் பணியாளர்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தரிசனம் முடிந்து வெளியே வந்த பிரபு நிருபர்களிடம் கூறியதாவது:- நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்கும் மார்ஷல் திரைப்பட சூட்டிங் கீழக்கரையில் நடக்கிறது. அந்த படத்தில் நடிப்பதற்காக ராமநாதபுரம் வந்துள்ளேன். இத்திரைப்பட இயக்குனரும் ராமேசுவரத்தை சேர்ந்தவர்தான். ராமேசுவரம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.