ரஜினி, விஜய் வழியில் களமிறங்கிய தனுஷ் – சினிமா வட்டாரத்தில் பரபரப்பு | Dhanush enters the Rajinikanth and Vijay-style arena

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் கடைசியாக ‘குபேரா’ படம் வெளியானது. தற்போது ‘இட்லி கடை’ என்ற படத்தை இயக்கி, நடிக்கிறார். மேலும், பாலிவுட்டில் தேரே இஷ்க் மெயின் என்ற படத்தினை தன் கைவசம் வைத்துள்ளார்.
இதற்கிடையில் ரஜினிகாந்த், விஜய் பாணியில் தனுசும், ஒரு நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதாவது, ரஜினிகாந்தும், விஜய்யும் அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தனுசும் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறார்.
ரசிகர்களின் நீண்டகால வேண்டுகோளை ஏற்று, சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவை தொடர்ந்து 25 வாரங்களுக்கு (ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்) அவர் முன்பதிவு செய்துள்ளார். அதன்படி, வருகிற 27-ந்தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 500 பேர் வீதம் தனது ரசிகர்களை சந்தித்து பேச அவர் முடிவு செய்திருக்கிறார்.
”இந்த வாரமே (நேற்று முன்தினம்) தனுஷ் ரசிகர்களை சந்தித்திருக்க வேண்டியது. காலில் லேசான அடிபட்டதால் அவர் பங்கேற்க முடியவில்லை. ரஜினி வழியை பின்பற்றி இருக்கும் தனுஷ், விஜய் வழியில் அரசியலில் இறங்குவாரா? என்பது விரைவில் தெரிய வரும். இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை தனுஷ் வெளியிட இருக்கிறார்”, என்றும் அவருக்கு மிக நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






