‘யூ-டியூப்'பில் வெளியாகும் கலைச்சோழன் நடித்த ‘திருக்குறள்' படம்

கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், திருவள்ளுவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாரித்த ‘திருக்குறள்’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது.
ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கிய இந்தப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி நடித்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். எல்லா தரப்பினரின் பாராட்டையும் படம் பெற்றது. கல்வி நிலையங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதற்கிடையில் ‘திருக்குறள்’ படம் ‘யூ-டியூப்’பில் வெளியாக இருக்கிறது. இதுகுறித்து பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘பொதுமக்களின் பாராட்டை பெற்றிருந்தாலும், இத்திரைப்படத்தைத் தமிழகமெங்கும் பரவலாக திரையிட முடியாமல் போனது.எனவே உலகத் தமிழர்கள் அனைவரும் ‘திருக்குறள்’ படத்தை கட்டணமின்றி கண்டு களித்திட காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ந்தேதி (இன்று) ‘யூ-டியூப்’பில் வெளியாகிறது. எங்களை பொறுத்தவரை உலக பொதுமறை தந்த திருவள்ளுவரை இக்கால தலைமுறையினரும் போற்றிட வேண்டும் என்பதே இலக்கு”. என்றார்.