''யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம், நானும் நிற்கிறேன் '' – நடிகர் பார்த்திபன்

சென்னை,
நடிகர் பார்த்திபன் தான் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது, தனுஷ் இயக்கி நடிக்கும் ”இட்லி கடை” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் ”அறிவு” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், பார்த்திபன் தனது புதிய படத்தை அறிவித்திருக்கிறார். இப்படத்திற்கு ”நான் தான் சிஎம்” எனப்பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அவரே எழுதி இயக்குகிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே!
ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் சிஎம் நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்!
போடுங்கம்மா ஓட்டு ‘படகு’ (Boat) சின்னத்தைப் பாத்து!
இப்படிக்கு,
சி.எம்.சிங்காரவேலன் எனும் நான்….” பார்த்திபனின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.