யார் மனதையும் இந்த சி.எம். சீர் கெட செய்ய மாட்டான் – பார்த்திபன் பரபரப்பு பதிவு, This CM will not spoil anyone’s mind

சென்னை
நடிகர் பார்த்திபன் அரசியலை மையமாகக் கொண்ட “நான் தான் சி.எம்” என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தில் அவர் சிங்காரவேலன் என்ற கதாபாத்திரத்தில், முதல்-அமைச்சர் பதவிக்கு போட்டியிடும் ஒருவராக நடிக்கிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்ட பார்த்திபன், “ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன். என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் சி.எம். நாற்காலியில் அமர்ந்த பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பதுதான்!
போடுங்கம்மா ஓட்டு போட் (Boat) சின்னத்தைப் பாத்து! இப்படிக்கு, சி.எம். சிங்காரவேலன் எனும் நான்… சோத்துக் கட்சி” என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் பார்த்திபன், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் பெயரை பயன்படுத்தியிருப்பதும், போட் சின்னம், சோத்துக் கட்சி என்று குறிப்பிட்டிருப்பதும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்து பார்த்திபன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
ஆட்ஷேபம் தெரிவிப்பது யாவும் நாங்கள் ஆள்/ஆழ் நோக்கமின்றி வைக்கப்பட்ட கற்புள்ள கற்பனை பெயர்களே! சி.எம். பக்கத்தில் rhyming ஆக ‘சி’ இருக்க வேண்டுமென (மெனக்கெடாமல்) வைத்த பெயரே சிங்காரவேலன். ஆனால் அது மரியாதைமிகு சிங்காரவேலரை குறிப்பிடுவதால் அதை உடனடியாக மாற்ற மனதார சம்மதிக்கிறேன்/மதிக்கிறேன் கவனத்தில் இட்டதற்கு!
Boat-ம் அப்படியே தடாலடியாக அதை கவிழ்த்து வேறு சின்னம் வைத்துக் கொள்ளலாம், ஆனால் இப்படம் மீனவ சமுதாயப் படமல்ல. ‘சோத்துக் கட்சி’ என்பது கால் நூற்றாண்டுகளுக்கு முன் மறைந்த சோ தலைமையில் ஆயிரம் பேருக்கு 10 கிலோ அரிசி கொடுத்துத் துவங்கப்பட்டது. அந்த ‘சோ’த்துக் கட்சி பெயரை மாற்ற வாய்ப்பே இல்லை. இல்லாதவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே அவசிய அரசியல். அதை என் எல்லா படங்களும் பேசும். இப்போது இப்படமும். அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.
முற்றுகை போராட்டம் போன்ற அநாவசிய/வசிய விளம்பரங்கள் என் படத்திற்கு தேவையில்லை. மீனவ நண்பர்களை மட்டுமல்ல யார் மனதையும் இந்த சி.எம். சீர் கெட செய்ய மாட்டான் என்பதை தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.