மோகன்லாலின் "திரிஷ்யம் 3" படப்பிடிப்பு அப்டேட்

கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் ‘திரிஷ்யம்’. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க ‘பாபநாசம்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது.
இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றன. அதனை தொடர்ந்து இயக்குனர் ஜீத்து ஜோசப் இப்படத்தின் மூன்றாம் பாகமான ‘திரிஷ்யம் 3’ படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தப் படத்தின் 3-வது பாகம் உருவாகும் என இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்திருந்தார். 2025ம் ஆண்டு ‘திரிஷ்யம் 3’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், ‘திரிஷ்யம் 3’ படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் ஜீத்து ஜோசப் புதிதாகப் படப்படிப்பு செய்வது போன்ற வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தற்போது, ஆசீர்வாத் சினிமாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அக்டோபரில் படப்பிடிப்பு எனக் குறிப்பிட்டுள்ளது. அந்த வீடியோவில், “கடந்த காலங்கள் அமைதியாக இருப்பதில்லை. அக்டோபர் 2025 – கேமிரா ஜியார்ஜ் குட்டி பக்கம் திரும்புகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது. .