முடிவுக்கு வந்த நடிகை அனஸ்வரா ராஜன் – இயக்குனர் பிரச்சினை|Anaswara

சென்னை,
மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகை அனஸ்வரா ராஜன். இவரது நடிப்பில் கடந்த சமீபத்தில் வெளியான படம் ‘ரேகாசித்திரம்’. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் பேச்சிலர்’.
இந்த படத்தை இயக்குனர் தீபு கருணாகரன் இயக்கியுள்ளார். சமீபத்தில் இயக்குனர் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அனஸ்வரா ராஜன் கலந்து கொள்ள மறுக்கிறார் என்று குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அனஸ்வரா ராஜன், ‘ படத்தின் புரமோஷன் குறித்து முறையான தகவல் எதுவும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. ஒரு நடிகையாக என்னுடைய படங்களை புரமோட் செய்ய வேண்டியது என்னுடைய பொறுப்பு. படத்தின் வெற்றிக்கு அதுவும் முக்கியமான ஒன்று என்பது எனக்கு தெரியும். எனக்கு முறைப்படி தகவல் தெரிவித்தால் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு தயாராகவே இருக்கிறேன்’ என்றார்.
மேலும், இயக்குனர் தீபு கருணாகரன் மீது நடிகர் சங்கத்தில் அனஸ்வரா புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சங்கமும் இயக்குனர் சங்கமும் இவர்கள் இருவரையும் அழைத்து பிரச்சினைகளை கேட்டு அறிந்து சுமூகமாக தீர்வு வழங்கி உள்ளதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக அனஸ்வரா உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.