மிகப்பெரிய தொகைக்கு விற்பனையான ‘காதி’ படத்தின் ஓ.டி.டி உரிமம்

சென்னை,
‘அருந்ததி’ என்ற பேய் படத்தில் நடித்து பிரபலமானவர் அனுஷ்கா ஷெட்டி. இவரின் சினிமா வாழ்க்கையில் ‘பாகுபலி’ முக்கிய படமாக அமைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’.
தற்போது இவர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் தனது 50-வது படமான “காதி” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஒரு சில காரணத்தால் அந்த தேதியில் படத்தினை வெளியிட முடியவில்லை.
பின்னர் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்தனர். அதன்படி, அனுஷ்கா- விக்ரம் பிரபு நடித்துள்ள ‘காதி’ படம் வருகிற ஜூலை 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் இப்படத்தின் ரிலீசை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் ஓ.டி.டி உரிமம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ரூ.36 கோடிக்கு அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.