’மம்முட்டி , பிரித்விராஜ் படங்களுக்கு ’நோ’ சொன்ன பாவனா’ |Did Bhavana reject a Mammootty and Prithviraj film? Here’s what she said

சென்னை,
மலையாள திரில்லர் படமான ’அனோமி’ மூலம் நடிகை பாவனா மீண்டும் திரைக்கு வர உள்ளார் . தற்போது அதற்கான புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். அந்தவகையில், மலையாள சினிமாவில் இருந்து தான் நீண்ட காலமாக விலகி இருப்பது மற்றும் அதன் பின்னணியில் உள்ள தனிப்பட்ட காரணங்கள் குறித்து நடிகை பாவனா பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், ’இப்போதெல்லாம் நான் எதையும் திட்டமிடுவதில்லை. திடீரென்று மலையாள சினிமாவிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அப்போதும் கூட, மலையாள சினிமாவைச் சேர்ந்த எனது நண்பர்கள் சிலர் தொடர்ந்து என்னை அழைத்து, ஒரு படம் செய்யச் சொன்னார்கள், ஸ்கிரிப்டையாவது கேட்க சொன்னார்கள்.
அதில் பிரித்விராஜ், ஜெயசூர்யா, மம்முட்டி படங்களும் அடங்கும். ஆனால் நான் நோ சொல்லிவிட்டேன். நான் ஏன் வேண்டாம் என்று சொன்னேன் என்று நீங்கள் கேட்டால், எனக்கு உண்மையில் பதில் இல்லை,அந்த நேரத்தில், நான் அதைச் செய்ய விரும்பவில்லை’ என்றார்.
பாவனா இப்போது ரியாஸ் மராத் இயக்கும் ’அனோமி’ படத்தில் ரஹ்மானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் . இந்தப் படத்தில் ஷெபின் பென்சன், திரிஷ்யா ரகுநாத் மற்றும் பினு பப்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற 30-ம் தேதி வெளியாக இருந்தநிலையில், தற்போது பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






