‘மனதை திருடிவிட்டாய்’ பட இயக்குனர் நாராயண மூர்த்தி காலமானார்

சென்னை,
கடந்த 2001-ம் ஆண்டு பிரபுதேவா, கவுசல்யா, காயத்ரி ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘மனதை திருடிவிட்டாய்’. இந்த படத்தினை ஆர்.டி.நாராயண மூர்த்தி இயக்கியிருந்தார். மேலும், சன் டி.வி.யில் வெளிவந்த நந்தினி, ராசாத்தி, ஜிமிக்கி கம்மல், அன்பே வா, மருமகளே வா போன்ற சின்னத்திரை தொடர்களையும் அவர் இயக்கி உள்ளார்.
இதற்கிடையில், இயக்குனர் நாராயணமூர்த்திக்கு கடந்த வாரம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு வார காலமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், இவர் நேற்று இரவு 8.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு அம்சவேணி என்ற மனைவியும், லோகேஷ்வரன் என்ற மகனும் உள்ளனர். மகன் லண்டனில் பணிபுரிந்து வருகிறார். அவர் சென்னை திரும்பியதும் நாராயணமூர்த்தி இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை (26.09.25) அன்று பம்மலில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.